Trending

மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும்

 

மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும்


முன்னுரை


நமது இந்திய விடுதலைக்காக பெரும் போராட்டங்களில் மகாத்மா காந்தியடிகள் தலைமையேற்ற பிறகு இந்தியாவின் செம்மை தன்மையினையும் தனித்தன்மையினையும் கருதிற்கொண்டு பிரித்தானிய அரசு பிரித்தது போல் அல்லாமல் இந்திய மாநிலங்கள் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதன் அடிப்படையில் 1920களில் உருவானது தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.


இதன் பிறகே மொழிவாரி மாநிலங்களை பற்றிய பேச்சு வார்த்தைகள் மற்றும் தீர்மானங்கள் அதிகமானது. 


1955 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி காந்தியத்தை சிரமேற்கொண்டு செயலாற்றும் ம.பொ.சிவஞானம் அவர்கள் தனது தமிழரசு கழகம் கட்சி நடத்திய செயற்குழுவில், சென்னை மாகாணம் என்னும் இந்நிலப்பரப்பிற்கு தமிழ்நாடு என பெயரிடப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை எடுத்து கூறினார். தமிழக மக்களுக்கு தமிழக நிலப்பரப்புக்கு 'தமிழ்நாடு' என்னும் பெயர் எத்தனை அத்தியாவசியமானது என்பதை எடுத்துரைத்தார். ம.பொ.சி-யின் தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' எனும் இலக்கிய ரீதியான ஆதார பெயர்-கருத்து மக்களிடையே காட்டுத்தீ போல் பரவியது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் பல போராட்டங்கள் வெடித்தன. சங்கரலிங்கனார் போன்ற தியாகிகள் காந்திய வழியிலே உண்ணாவிரத்தினாலே மாண்டார். 


தமிழ்நாடு உதயத்திற்கு பல்வேறு தியாக சீலர்களின் உயிரும் குருதியும் காணிக்கை ஆயின. அதைப்பற்றி விளக்குவதே மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும் எனும் இக்கட்டுரை ஆகும்.


முழு வேலை நிறுத்தம்


ம.பொ.சி அவர்கள் 1955 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி 'தமிழ்நாடு' எனும் பெயரை அறிவித்த இரண்டே மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து கட்சி சார்பில் முழு வேலை நிறுத்தம் மற்றும் கடை அடைப்பு செய்து போராட்டம் நடத்தினர்.


ம.பொ.சிவஞானம் அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரை இலக்கிய ரீதியில் எடுத்து காட்டுகளோடு கூறிய போது தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டனர். 'தமிழ்நாடு' என்னும் பெயரில் வரலாற்று சிறப்பும் கலாச்சார பெருமையும் இருப்பதை உணர்ந்தனர். ஆனால் அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு இதனை ஏற்க மறுத்தது.


தார் ஆணைய குழு


ம.பொ.சி அவர்கள் 1948 செப்டம்பர் 13ஆம் நாள் தார் ஆணையக் குழுவைச் சந்தித்து, 'தமிழ்நாடு' பெயர் மாற்றம் பற்றியும் மொழிவாரி மாநிலம் பற்றியும் கோரிக்கை விண்ணப்பம் கொடுத்தார். அந்த விண்ணப்பத்தில்,


"சென்னை மாகாணத்தைத் தமிழகம், ஆந்திரம், கேரளம், கன்னடம் என நான்கு மொழிவழி மாநிலங்களாக உடனே ஏக காலத்தில் பிரிக்க வேண்டும். தமிழ்நாடு தனி மாநிலமாகப் பிரிய வேண்டியது அவசியம் என்பதைத் தமிழர்கள் உணர்கின்றனர். அந்தப் பிரிவினை அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். பிரிக்கப்படும் தமிழ் மாகாணத்தின் எல்லைகள் தெற்கே குமரி முனையாகவும் வடக்கே திருப்பதியாகவும் இருக்க வேண்டும். சென்னை நகரம் தமிழ்நாட்டிலேயே இருக்க வேண்டும். புதிய தமிழகம் சட்டசபை, மந்திரிசபையோடு கூடிய சுயாட்சியுள்ள மாகாணமாக இருக்க வேண்டும். அந்நிய நாட்டுறவு, போக்குவரத்து, பாதுகாப்பு ஆகியவற்றை மத்திய அரசுக்கு விட்டுக் கொடுத்து, ஏனைய எல்லா அதிகாரங்களும் உள்ள சுதந்தர அரசுகளாக மாநிலங்கள் இருக்க வேண்டும்”


என்று ம.பொ.சிவஞானம் தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டு இருந்தார்கள். 1948 ஆம் ஆண்டு தார் ஆணையம் வெளியிட்டிருந்த பதிலில் "இந்தியாவில் மொழிவாரி மாநிலம் அமைக்கக் கூடாது" என விளக்கி இருந்தது.


வடக்கெல்லை போராட்டம்


ம.பொ.சி அவர்கள் தமிழகத்தின் எல்லையாக நேருவுக்கு எழுதிய கடிதத்தில் தொல்காப்பியத்தின் பானம்பரனார் எழுதிய சிறப்புப்பாயிர வரிகளான 


'வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகம்'


என்பது மேற்கோள் காட்டப்பட்டு இருந்தது. இதன் வாயிலாக திருப்பதி தமிழகத்தின் வடக்கு எல்லையாக வேண்டுமென்ற நிலைப்பாடு தமிழர்களிடையே இருந்தது. ஆனால் மொழிவாரி பிரிப்பில் ஆந்திர மாநிலம் திருப்பதியை கையகப்படுத்தியது.


இதற்காக வடக்கெல்லை பாதுகாப்புக் குழு 1952இல் அமைக்கப்பட்டது. அதன் தலைவர் ம.பொ.சிவஞானம் அவர்கள் ஆவார். செயலாளர் தளபதி கே. வினாயகம். இவர்கள் சேர்ந்து வடக்கு எல்லை மீட்புக்காக பல போராட்டங்கள் நடத்தினார்கள். 144 தடையை மீறி ம.பொ.சி., கே. வினாயகம், மங்கலங்கிழார் உள்ளிட்டோர் 25.06.1953இல் கைதாகிச் சிறை சென்றனர்.


அப்போது ம.பொ.சி அவர்களுக்கு தமிழக முதல்வர் ராஜாஜி அவர்கள் கடிதம் எழுதினார்


ராஜாஜி கடிதம்


"தாங்கள் தடையை மீறி சிறை புகுவதற்கு முடிவு செய்துவிட்டதாக அறிகிறேன். அது தேவையற்ற முயற்சி. அந்த முயற்சியைக் கைவிட்டு, உடனே சென்னை வந்து என்னைப் பார்க்கக் கோருகிறேன்" இது வடக்கு எல்லைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த சமயத்தில் ம.பொ.சி-க்கு மூதறிஞர் ராஜாஜி எழுதிய கடிதம். ராஜாஜியின் கடிதத்தினை ம.பொ.சி அவர்கள் நிராகரித்தார்கள்.


தலைநகர மீட்பு போராட்டம்


வடக்கு எல்லை வெறும் எல்லை பிரச்சனையாகவும் தலைநகர மீட்பு உணர்வுகளில் கலந்ததாகவும் தமிழரசு கழகம் எண்ணி துணிந்தது. இதனால் தலைநகர மீட்பு போராட்டம் பேரளவில் நடத்தப்பட்டன.


சென்னையை ஆந்திராவின் தலைநகராக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து 82 நாள் உண்ணாவிரதம் இருந்து ஸ்ரீராமலு அவர்கள் மரணமானது இப்போராட்டத்திற்கு முதல் காரணமாகும். இதன் பிறகே ஆந்திராவுடன் சென்னை இணைக்கப்படுவது குறித்தான பேச்சுகள் அதிகமானது.


ம.பொ.சி போன்ற பெருந்தலைவர்களால், 'தலையைக் கொடுத்தேனும் தலைநகரை மீட்போம்' எனும் அனல் தெறிக்கும் வீர முழக்கம் இளைஞர்கள் மத்தியில் வெகுவாக பரவியது.


சென்னை தமிழக தலைநகராகத் தான் வேண்டுமென்று அண்ணா, பெரியார், காமராசர் போன்ற பெருந்தலைவர்களும் தொடர்ந்து கூறினார்கள்.


தமிழக முதல்வாராக இருந்த ராஜாஜி அவர்கள், சென்னையை தமிழக மற்றும் ஆந்திராவின் இருமாநில தலைநகராகவோ அல்லது ஆந்திர தலைநகராகவோ நேரு அறிவித்தார் எனில் நான் முதலமைச்சர் பதவியிலிருந்து பதவி விலகுவேன் என்ற பரபரப்பான அறிக்கையை வெளியிட்டார்.


முடிவாக `ஆந்திரத்தின் தலைநகரானது ஆந்திரத்திற்குள்ளாகவே தேர்வு செய்யப்படும் ' என்று நேரு அறிவித்தபின் போராட்டம் ஓய்ந்தது


தெற்கு எல்லை போராட்டம்


தமிழகத்தின் வடவேங்கடத்தை எவ்வாறு ஆந்திர அரசு எடுத்து கொண்டதோ அதே போல் தென்குமரியை கேரள அரசு எடுத்து கொள்ள முயற்சி செய்தது.


1956 வரை திருவாங்கூா் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாகவே கன்னியாகுமரி இருந்து வந்துள்ளது.  கேரள மாநிலம் முன்பு திருவாங்கூர் மாகாணமாக இருந்தது. இது ஒன்றிணைந்த கேரள மாநிலத்தை உருவாக்க வழிகோலியது. அப்போது முன்பு ஆட்சி மொழியாக இருந்த தமிழ்மொழி தன் அங்கீகாரத்தை இழந்தது. மலையாளம் மட்டுமே மாநிலத்தின் ஆட்சி மொழியானது. ஆங்கே இருந்த பெரும்பான்மை தமிழர்களுக்கு இது மானப்பிரச்சனையாக பார்க்கப்பட்டது. பெண்கள் மார்பு சேலை அணிவதையும், கோயிலுக்குள் செல்வதில் தடை செய்ததையும் தமிழர்கள் வெகுவாக எதிர்த்து தங்களது கொந்தளிப்பை காட்டினர்.


1946 ஜூன் 30-ல், `அனைத்து திருவாங்கூா் தமிழ் காங்கிரஸ்' உருவானது. கன்னியாகுமரி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கான இயக்கத்தை மார்ஷல் நேசமணி வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றார்


நாராயண குருவும் இப்போராட்டத்திற்கு பெரிதும் உதவினார். இவர்களைப் போலவே குமரி மாவட்ட மக்கள் முன்னேற வேண்டுமென்று போராடியவர்கள் குஞ்சன் நாடார், அப்துல் ரசாக், சிதம்பரநாதன் நாடார், எம்.வில்லியம், டி.டி. டேனியல், தாணுலிங்க நாடார், பொன்னப்ப நாடார், சிதம்பரம் பிள்ளை, சிவதாணு பிள்ளை, ராமசாமி பிள்ளை போன்றோர்கள் ஆவர். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.


திருவாங்கூா் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு, குமரி மாவட்டத்தை முந்தைய மெட்ராஸ் மாகாணத்துடன் அதாவது தமிழ்நாடுடன் இணைப்பதை குறித்து அதிகம் வலியுறுத்தியதால் அப்போதைய இந்திய யூனியனின் துணைப்பிரதமரான சா்தார் வல்லபாய் படேல் அக்கோரிக்கையை ஏற்று மொழி அடிப்படையிலான மாநில பிரிப்பின் போது இதை நடைமுறைப்படுத்துவதாக உறுதி அளித்தார். பின்பு குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.


முடிவுரை


சுமார் ஒரு இருபது வருடங்களுக்கும் மேலாக தமிழகத்தில் எல்லை பிரச்சனைகள் நடந்து கொண்டிருந்தது. இதற்காக தங்களின் வாழ்வில் ஒரு பெரும் பகுதியை அர்பணித்த உன்னதமான தியாகிகள் பலர் உள்ளார்கள். தங்களது தாய் மண்ணை காக்க தடியடி பெற்ற தமிழரசு கட்சி தொண்டர்கள் பலர்.


மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும் தான் இன்றைய நம் ஒழுங்குமுறை படுத்தப்பட்ட தமிழ்நாட்டிற்கு விதையாக உள்ளது. இதை ஆக்க முற்பட்டு தங்களை மண்ணுக்குள்ளே அழுத்தி கொண்ட வேர்களாக மொழிவாரி போராட்ட தியாகிகள் திகழ்கிறார்கள். 


தமிழ்நாட்டை ஆக்கிய தகைசால் அம்மாமனிதர்கள் தமிழ் உள்ளளவும் வாழ்வார்கள். அவர்கள் நடத்திய போராட்டங்களின் வரலாறுகளும் சிந்திய குருதியின் அளவீடும் இம்மண்ணை என்றும் பெருமை படுத்துவனவாக திகழும்.


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு