Trending

சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு

 

சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு


முன்னுரை


தமிழ்நாடு தனக்கு தமிழ்நாடு என்னும் பெயரை பெறுவதற்கே பல போராட்டங்களையும் பல இழப்புகளையும் சந்திக்க நேர்ந்தது. தியாகி சங்கரலிங்கனார், சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானம், காமராஜர், மூதறிஞர் ராஜாஜி போன்றோர்களின் பெருமுயற்சிக்கு பிறகு அறிஞர் அண்ணாவின் அறிவாற்றல் வல்லமையால் சட்டமன்றத்தில் 'தமிழ்நாடு' என்னும் பெயர் சூட்டப்பெற்று 'தமிழ்நாடு வாழ்க' எனும் ஜெயகோஷம் வின்னதிர முழங்கிற்று. அந்நிகழ்வை விளக்குவதே சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு என்னும் இக்கட்டுரை


சென்னை மாகாணம்


திமுக 1957 ஆம் வருடம் மே 7 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்று வெள்ளையர்களால் அழைக்கப்பட்ட மெட்ராஸ் மாகாணம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றும் தீர்மானத்தை கொண்டு வந்தது. ஆனால் அத்தீர்மானத்துக்கு 42 வாக்குகளே கிடைத்தது. காங்கிரஸின் 127 எதிர்ப்பு  வாக்குகளால் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. இதே வேளையில் தான் காங்கிரஸ் ஆதரவாளரான சங்கரலிங்கனார் அவர்களும் சாகும் வரை உண்ணாவிரதத்தினை மேற்கொண்டார். இருந்தும் அவரை சார்ந்துள்ள பிற காங்கிரஸ் ஆதரவாளர்களே 'தமிழ்நாடு' என்ற பெயர் மாற்றத்திற்கு உடன்படவில்லை.


தியாகி சங்கரலிங்கனார் ஆகச்சிறந்த காந்தியவாதி ஆவார். இவர் தனது உண்ணாவிரதம் யாருக்கும் இடையூறு தரக்கூடாது என்பதற்காக தன் வீட்டு வாசலிலே சாகும் வரை உண்ணாவிரதத்தினை மேற்கொண்டார்.


தமிழக புரட்சி


பின்னர் 1961 ஆம் ஆண்டு ஷோஷலிஸ்ட் உறுப்பினர் பி.சின்னத்துரை கொண்டு வந்த, தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானமும் காமராஜரால் விவாதத்துக்கே எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதனால் அதும் அதிகம் கவனித்தம் இல்லாமல் போனது. இருந்தும் அப்போதைய தமிழக நிதியமைச்சர் 'தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை வெளியிடுகிறேன்' என்று கூறியே அறிக்கையை வெளியிட்டார். தமிழ்நாடு எனும் சொல் அக்காலக்கட்டத்தில் ஒரு புரட்சி சொல்லாக மாறியது


1961ல் பாராளுமன்றத்தில் மேற்கு வங்க கம்யூனிஸ்ட் உறுப்பினர் பூபேஸ் குப்தா மெட்ராஸ் மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் மாற்றும் தீர்மானத்தை கொண்டு வந்தார். 


பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு


அதில் கலந்து கொண்டு உரையாற்றிய பேரறிஞர் அண்ணா சிலப்பதிகாரம்,மணிமேகலை, பரிபாடல், தொல்காப்பியம் போன்ற இலக்கியக் காலம் தொட்டே தமிழகத்துக்கு தமிழ்நாடு என பெயர் வழங்குவதை ஆதாரத்துடன் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.


"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்" என்ற தொல்காப்பிய வரிகளையும் "இமிழ் கடல் வேலியை தமிழ் நாடாக்கின" என்ற சிலப்பதிகார பாடலையும் எடுத்துக்காட்டாக காட்டினார்.


"மெட்ராஸை தமிழ் நாடாக்கி என்ன சாதிக்க போகிறீர்கள்" என காங்கிரஸ் கட்சியினர் கேட்டார்கள். சபை மௌனமானது 


"பார்லிமென்டை லோக்சபாவாக்கி என்ன சாதித்தீர்கள்" என பேரறிஞர் அண்ணா வீர முழக்கம் செய்தார். 


"பிரசிடென்டை இராஷ்டிரபதி என மாற்றி என்ன பலனை கண்டீர்கள்" என்று கேள்விகளை அடுக்கி கொண்டே போனார்.


"மாநிலத்தின் தலைநகராக உள்ள ஊரின் பெயர்தான் மாநிலத்தின் பெயராக அமைய வேண்டும்" என ஆணித்தரமான கூச்சலை சபையினர் எழுப்பினார்கள்


"அப்படியானால் கேரளாவுக்கு ஏன் திருவனந்தபுரம் என்றும் ஆந்திராவுக்கு ஹைதாராபாத் என்றும் கர்நாடகாவுக்கு பெங்களூர் என்றும் ஏன் பெயர் வைக்கவில்லை" என அண்ணா கேட்டார். சபை மீண்டும் மௌனமானது.


காங்கிரஸ் அமைச்சர் ஆர் வெங்கட்ராமன் எழுந்து "மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என ஒப்புக்கொண்டால் மெட்ராஸ் பெயரில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் காலாவதி ஆகிவிடும்" என்றார்.


அதற்கு பதிலடியாக பேரறிஞர் அண்ணா எழுந்தார் "கோல்டு  கோஸ்ட்" என்ற நாடு தனது பெயரை "கானா" என்று மாற்றிக்கொண்டதே! கானா மீது இந்தியா போட்ட ஒப்பந்தங்கள் ஏன் காலாவதி ஆகவில்லை" என அனைவரையும் அசரவைக்கும் விதமாக கேட்டார்.


பார்லிமென்டை "லோக்சபா" என்றும் கவுன்சில் ஆப் ஸ்டேட்ஸ் என்பதை "இராஜ்யசபா" என்றும் பெயர் மாற்றிய உங்களால் "தமிழ்நாடு" என பெயர் மாற்ற முடியாதா? என பிரதமர் நேருவை பார்த்து நேருக்கு நேராக கேட்டார் அண்ணா. சபையோர் அதிர்ச்சி அடைந்தனர்.


ஆனால் அந்த தீர்மானமும் பின்னர் 1964ல் திமுக அரங்கண்ணனால் கொண்டு வந்த தீர்மானமும் தோற்கடிக்கப்பட்டது.


சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு


“அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலத்தின் பெயரை குறிப்பிடும்போது தமிழ்நாடு என மாற்றி அமைக்கப்பட வேண்டுமென உறுதியாக கருதுவதுடன், அரசியலமைப்பில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மாநில அரசு நடவடிக்கை எடுக்க பேரவை பரிந்துரைக்கிறது” என்றார் பேரறிஞர் அண்ணா. இதனை வரவேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸின் கருத்திருமன், “தமிழ்நாடு – மெட்ராஸ் ஸ்டேட் என்று பெயர் இணைந்திருக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து பேசினார். தீர்மானத்தின் போது நிறைவுறையாற்றிய பேரறிஞர் அண்ணா, “எதிர்காலத்தில் வரும் தலைமுறையினர், நமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நெடுங்காலத்திற்குப் பிறகு அமர்ந்து பேசுகிற வேளையில் பெருமையோடு சொல்லிக்கொள்ளும் நிகழ்வாக தமிழ்நாடு பெயர் மாற்ற நிகழ்வு அமையும்” என்று பீடுபட மொழிந்தார்..


பின்னர் தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானத்தை நிறைவேற்ற அனுமதி கோரினார். அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் காங்கிரஸால் பலமுறை தோற்கடிக்கப்பட்ட தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானம் பேரறிஞர் அண்ணா ஆட்சி அமைந்த பிறகு 1968 ஜுலை 18 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பேரவைத் தலைவர் ஆதித்தனார் அனுமதியுடன் அண்ணா "தமிழ்நாடு" என மூன்று முறை கூற "வாழ்க" என்று உறுப்பினர்கள் வின்னதிர முழக்கமிட்டார்கள்.


புனித ஜார்ஜ் கோட்டையே 'தமிழ்நாடு வாழ்க' என்னும் பேரொலியை வெளிப்படுத்துவது போல் சட்டமன்றத்தில் ஒலித்த 'தமிழ்நாடு' நிகழ்வு அமைந்தது


முடிவுரை


இந்தியா எவ்வாறு தனது மூவர்ண கொடியை நிலைநாட்ட குருதியையும் உயிரையும் விலையாக தந்ததோ அதே போல் நம் தமிழ் மண்ணும் தனக்கு பெயர் சூட்டி கொள்வதிலே பல ரத்த கறைகளை கண்டது.


முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும்


என்னும் குறள் கூறுவது போல தமிழக வரலாற்றில் பேரறிஞர் அண்ணாவும், மூதறிஞர் ராஜாஜியும் 'தமிழ்நாடு' என்னும் பெயர் சூட்டுவதிலும் எல்லை போராட்டங்களிலும் தவிர்க்க முடியாத இடத்தினை பெறுகிறார்கள்.


எல்லை போராட்டங்களிலும், தலையை கொடுத்தாவது தலைநகரத்தை மீட்போம் என்ற ம.பொ.சி அவர்களும் சாகும் வரை 'தமிழ்நாடே' என் உயிர் என வாழ்ந்து மரணித்த சங்கரலிங்கனாரும் தியாகி பட்டியலில் சேர்க்கப்படுவர்களாகிறார்கள்.


அன்று சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு இன்று அவ்வாறு ஒலித்தவர்களின் நினைவுகளுடனே புகழென்னும் பேரொலியை இசைக்கிறது

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு