Trending

பெண்கள் பற்றி பாரதியார் | Pengal Bharathiyar Kavithaigal

 pengal bharathiyar kavithaigal

pengal bharathiyar kavithaigal

பாரதியார் நாட்டின் விடுதலை பற்றி பேசியது போலவே பெண்ணடிமை பற்றியும் வெகுவாக பல கவிதைகளையும் கட்டுரைகளையும் இயற்றியுள்ளார். அவைகளை தொகுத்து அளிப்பதே இக்கட்டுரை



கவிதைகள்

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!

பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!

தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன

தாயின் பெயரும் சதியென்ற நாமமும்

அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்.

ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்;

துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!

சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்

வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!

மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்;

கலிய ழிப்பது பெண்க ளறமடா!

கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம் 


இந்த வைர வரிகளை பாரதியார் பெண்மை என்ற கவிதை பக்கத்தில் தருகிறார். கவிதை தொடக்கமே பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா என்கிறார். அதாவது இது நேரடியாக ஆண்களுக்கு பெண்களை பற்றி உணர்த்த வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்ட பாடலாகும்.


புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்

பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்

சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள்

தன்னி லேபொது வான் வழக்கமாம்;

மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர்

மாத வப்பெரி யோருட னொப்புற்றே

முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய

முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்


நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;

அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்

அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை

உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்

உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!


உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,

ஓது பற்பல நூல்வகை கற்கவும்,

இலகு சீருடை நாற்றிசை நாடுகள்

யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே

திலக வாணுத லார்நங்கள் பாரத

தேசமோங்க உழைத்திடல் வெண்டுமாம்;

விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை

வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்


பாரதி கையெழுத்தில் பெண்கள் படிக்க வேண்டிய செந்தழல் தெறிக்கும் வரிகள் இது,


விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை

வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்


நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;


இங்கே ஞானச்செருக்கு என்பதை தான் கவனிக்க வேண்டும். பாரதி ஒரு மகா கவி என்பதற்கு இது ஒரு சாட்சி.


➤ பாரதியாரின் கற்பனையில் பாரத தேசம்


நிமிர்ந்த நன்னடை இருக்குமாம். நேர்கொண்ட பார்வை இருக்குமாம். புவியில் யார்க்கும் அஞ்சாத அறநெறி இருக்கும். ஞானச்செருக்கானது இவை எல்லாம் கூடியதால் திமிரி எழுமாம்.


அதனால் தான் திமிர்ந்த ஞானச்செருக்கும் என்கிறார் நம் பாரதி. இந்த கவிதை புதுமைப்பெண் என்ற தலைப்பின் கீழ் அமைந்தது ஆகும்.


விடுதலைக்கு மகளிரெல் லோரும்

வேட்கை கொண்டனம்;வெல்லுவம் என்றெ

திடம னத்தின் மதுக்கிண்ண மீது

சேர்ந்து நாம்பிர திக்கினை செய்வோம்.

உடைய வள்சக்தி ஆண்பெண் ணிரண்டும்

ஒருநி கர்செய் துரிமை சமைத்தாள்;

இடையிலேபட்ட கீழ்நிலை கண்டீர்.

இதற்கு நாமொருப் பட்டிருப் போமோ?


திறமை யால்இங்கு மேனிலைசேர்வோம்;

தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்;

குறைவி லாது முழுநிகர் நம்மைக்

கொள்வ ராண்க ளெனிலவ ரோடும்

சிறுமை தீரநந் தாய்த்திரு நாட்டைத்

திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம்;

அறவி ழுந்தது பண்டை வழக்கம்;

ஆணுக் குப்பெண் விலங்கெனும் அஃதே


விடியு நல்லொளி காணுதி நின்றே,

மேவு நாக ரிகம்புதி தொன்றே;

கொடியர் நம்மை அடிமைகள் என்றே

கொண்டு,தாம்முதல் என்றன ரன்றே.

அடியொ டந்த வழக்கத்தைக் கொன்றே,

அறிவு யாவும் பயிற்சியில் வென்றே

கடமை செய்வீர்,நந்தேசத்து வீரக்

காரிகைக் கணத்தீர்,துணி வுற்றே


பெண் விடுதலை கவிதைதான் இது. அறிவு யாவும் பயிற்சியில் வென்றே கடமை செய்வீர் பெண்களே என பெண்விடுதலை பேசுகிறது.


கும்மியடி!தமிழ் நாடு முழுதும்

குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!

நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின

நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி)


ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்

றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;

வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற

விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார். (கும்மி)


மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில்

மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,

வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை

வெட்டி விட்டோ மென்று கும்மியடி! (கும்மி)


நல்ல விலை கொண்டு நாயை விற்பார்,அந்த

நாயிடம் யோசனை கேட்ப துண்டோ?

கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை

கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார். (கும்மி)


கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;

வற்புறுத் திப்பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்

வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம். (கும்மி)


பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்

பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;

எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்

இளைப்பில்லை கணென்று கும்மியடி! (கும்மி)


வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்

வேண்டி வந்தோ மென்று கும்மியடி!

சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்

சாதி படைக்கவும் செய்திடு வோம். (கும்மி)


காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்

காரியம் யாவினும் கைகொடுத்து,

மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்

மாட்சி பெறச் செய்து வாழ்வமடி! (கும்மி)


இந்த பாடல் பலருக்கும் தெரிந்த இசைவகையில் பாட ஏற்ற சிறந்த பெண் விடுதலை பாடலாகும். பெண் விடுதலை கும்மி என்ற தலைப்பின் கீழ் இது எழுதப்பட்டுள்ளது.


➤ இந்திய விடுதலை போரில் மகாகவி பாரதியாரின் பங்கு


"பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி!" இதில் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற வரியிலிருந்து பாரதி தன்னை ஒரு பெண்ணாகவே பாவித்து எழுதியதாகவே எனக்கு தோன்றுகிறது. 


இதுபோன்று பெண்ணுக்கென எழுதப்பட்ட பாடலன்றி பிற நாட்டுப்பற்று கொண்ட பாடல்களிலும் பெண்ணது பெருமை பாரதி முழங்கி உள்ளார். அவை,


பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வளர்த்திடும் ஈசன் மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார் கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக் காட்சி கொடுத்திடலாமோ பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம் பேதமை யற்றிடும் கானர்'


பாரதியின் முரசுப்பாட்டின் வரிகள் இது.


பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்

பயங்கொள்ள லாகாது பாப்பா,

மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.


துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்

சோர்ந்துவிட லாகாது பாப்பா,

அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்

அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.


என்கிறார் பாப்பா பாட்டில்


கட்டுரைகள்


இதுமட்டுமல்லாது பாரதி பெண்களின் பீடுகள் பற்றி கட்டுரைகளிலும் எழுதியுள்ளார். அவைகளில் இருந்து சில வரிகள்.


மாதர் என்ற புத்தகத்தில் பெண் அடிமைத்தன விடுதலை பற்றி பாரதி சொல்லாத சொல் இல்லை.


பெண்கள் பற்றி பாரதியின் கவிதைகள் DOWNLOAD செய்ய


கட்டுரைகளில் சில வரிகள்


இன்று தமிழ்நாட்டில் மாத்திரமேயல்லாது பூமண்டல முழுவதிலும், பெண்ணைத் தாழ்வாகவும் ஆணை மேலாகவும் கருதி நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு. அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம். அநீதிகளுக்கெல்லாம் கோட்டை. கலியுகத்திற்கு பிறப்பிடம்


அடுத்து பதிவிரதை என்ற கட்டுரை பேசுகிறது


ஸ்திரீகள் பதிவிரதையாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். அதிலே கஷ்டம் என்னவென்றால், ஆண் பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை. ஆண் மக்களில் ஒவ்வொருவனும் தன் மனைவி, மக்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டும் என்பதில் எத்தனை ஆவலோடு இருக்கிறானோ, அத்தனை ஆவல் இதர ஸ்திரீகளின் பதிவிரத்யத்திலே காட்டுவதில்லை. ஒவ்வொருவனும் ஏறக்குறைய தன் இனத்து ஸ்திரீகளை பதிவிரதைகளாக நம்புகிறான்


அடுத்து தமிழ்நாட்டு நாகரிகம் என்ற கட்டுரை,


"ஔவையாரைப் போல் கவிதையும் சாஸ்திரமும் செய்யக் கூடிய ஓர் ஆண் மகன் இங்கு பிறந்திருக்கிறானா? ஏன் பிறக்கவில்லை? இதனின்றும் ஆண் மக்கள் இயற்கையிலே பெண்களை காட்டிலும் அறிவு திறமையில் குறைந்தவர்களென்று தெளிவாக விளங்குகிறதன்றோ?"


இன்னும் பல கட்டுரைகள் கதைகளென பாரதி 39 வயது வரை எழுதியதையே நாம் 100 வயதாகும் வரையில் ஆய்வு செய்யலாம்.


➤ பாரதியார் பற்றிய கட்டுரை


நீங்கள் கவிதை எழுதுபவரா? உங்களது கவிதைகளை தென்றல் இதழில் வெளியிட்டு பல்லாயிர வாசகர்களை சென்றடையுங்கள்


தொடர்புக்கு

WhatsApp

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு