Trending

தேசிய ஒருமைப்பாடு கட்டுரை

 

தேசிய ஒருமைப்பாடு கட்டுரை


  

{tocify} $title={Table of Contents}



முன்னுரை


பரந்தகன்ற நம் இந்தியா 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டது. "கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் உன் உதிரத்தே உதிர்தெழுந்து ஒன்று பல ஆயிடினும்" என மனோன்மணியம் பெ.சுந்தரனார் தமிழுக்கு வாழ்த்துரை தந்தது போல,


"நூற்று முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை ஒப்பி லாத சமுதாயம் உலகத் துக்கொரு புதுமை" என பாரதியின் வரிகளை புதுமைப்படுத்தி கூறுவதில் ஓர் அர்த்தம் இருக்கிறது. நமது இந்திய தேசம் பல்வேறு மொழிகளை கொண்டது இந்தியாவை 'மொழிகளின் காட்சி சாலை' என்கிறார் அகத்தியலிங்கனார். அதோடு பல்வேறு இனங்களை கொண்டது பலகோடி மக்களால் இந்திய திருநாடு மதம்,மொழி,கலாச்சாரம் என பல துண்டுகளாக பிரிக்கப்பட்டு இருந்தாலும் அடிப்படையில் நாம் இந்தியர்கள் அனைவரும் ஒருதாய் வயிற்று பிள்ளைகள். "என்னுடைய தாய் நாடு இந்தியா! இந்தியர்கள் அனைவரும் என்னுடன் பிறந்தவர்கள் எனும் உறுதி முழக்கத்தில் இந்திய மண்ணில் நிலவும் பிரிவினை சக்திகள் செயலற்று போகின்றன.


நமது நாட்டில் பிரச்சனைகள் இல்லாமலில்லை இருந்தும் இம்மண்ணின் இன்மணம் மாறாமல் இருப்பதற்கு ஒரே காரணம் 130 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் தேசிய ஒருமைப்பாடு உணர்வே ஆகும். அதைப்பற்றிய ஒரு அரும்புகழ் கட்டுரையே இது.


🔗 சுதந்திர தினம் கட்டுரை


வேற்றுமையில் ஒற்றுமை


உலகில் மொத்தம் 14 மொழி குடும்பங்களே உள்ளன. இம்மொழி குடும்பங்கள் ஒவ்வொன்றும் பல்வேறு மொழிகளை கொண்டு விளங்கும். இதில் இந்தியாவில் மட்டுமே 4 மொழி குடும்பங்கள் உள்ளது. அதாவது 3000 த்திற்கும் மேற்பட்ட மொழிகள் இந்தியாவிலேயே உள்ளது. ஒவ்வொரு மொழி நிலமும் தனக்குரிய தனித்தன்மையுடன் ஒவ்வொரு கலாச்சாரத்தினை கொண்டு விளங்குகிறது. உணவு, உடை, வாழ்வமைப்பு, பழக்கவழக்கம், சமய ஒழுக்கம் என அனைத்து நடவடிக்கையிலும் இந்திய மாநிலங்கள் ஒன்றை ஒன்று வேறுபட்டன. சில மாநிலங்களுக்குள்ளே பல வேறுபாடுகள் இருக்கும். ஆனாலும் இந்திய மக்கள் இந்திய மக்களே. இதற்கு தகுந்த உதாரணமே "இந்திய சுதந்திர போராட்ட வரலாறு" ஆகும். 


சுதந்திரம் அடைவதற்கு முன் இந்தியா அடிமைப்பட்டு கிடந்த போது சாதி,மதம்,இனம் என வேறுபட்ட மனநிலை கொண்ட மக்கள் பரந்த இந்நிலப்பரப்பில் விரவி இருந்தாலும் தான் 'இந்தியன்' என்ற உணர்வினை அனைவரும் விட்டு கொடுத்துவிடவில்லை. ஒத்துழையாமை இயக்கத்தில் நாடே ஒற்றுமையானது தேசிய ஒருமைப்பாடு உணர்வுக்கு இது ஒரு தகுந்த உதாரணமாகும்.


இந்தியா இந்தியா

நமது இந்தியா

இமயமுதல் குமரிவரை

நமது இந்தியா


வேற்றுமையில் ஒற்றுமைதான்

கொண்ட இந்தியா

வேகத்தோடு முன்னேறும்

நமது இந்தியா


🔗 வளமான இந்தியாவை உருவாக்குவோம் கட்டுரை


சமய பிரிவினைகள்


இந்தியா எவ்வாறு மொழிகளின் காட்சிசாலையாக இருக்கிறதோ அதே போல் சமயங்களின் பெட்டகமாகவும் உள்ளது. சீனா மட்டுமல்ல உலகளாவிய பௌத்த மதத்தின் பிறப்பிடம் நமது இந்தியா. 


இந்தியாவின் வேதங்களும் உபநிடதங்களும் உலக ஒற்றுமையை வலியுறுத்தின அகிம்சையையும் அன்பையும் உலக மக்களை சம நோக்கோடு காண்பதையும் எடுத்துரைத்தன. ஆனால் சமய சங்கங்கள் தனது அர்த்தமான ஒழுங்களை விட்டுவிட்டு தன்னை வளர்த்து கொள்ள தொடங்கின. 


தத்துவ தர்க்க மேடைகள் உருவாயின. ஒரு மதம் இன்னொரு மதத்தினை பழித்துத் தாக்கின. மதங்களின் நிறைகளை காணது குறைகளை அடுக்கி தனது வெறுப்புணர்வை வெளிப்படுத்தியது. இதனால் மக்கள் நிலையான சமயயுணர்வில் இல்லை. ஒழுக்கத்தினை மறந்து பெருமையினை நிலைநாட்டுவதற்கு சமயக் கொடிகளை பிடிக்கலாயினர்.


இந்திய தேசம் சமயங்களால் என்றோ பிரிவினைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் அதே சமயங்களே இந்திய நலனில் அக்கறை காட்டி ஒற்றுமையை வளர்த்தெடுத்து.


ராஜாராம் மோகன் ராய், சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றோர்களால் உருவாக்கப்ட்ட பிரம்ம சமாஜமும் ஆரிய சமாஜமும் இந்தியாவில் உள்ள ஏற்று தாழ்வுகளையும் சாதிய அடக்குமுறைகளையும் களைய பாடுபட்டது. 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமலிங்க அடிகளார் உலக ஒற்றுமையை சத்திய தரும சாலையின் மூலம் நிறுவ முயற்சித்தார். அதனை மகாத்மா காந்தியடிகள் இந்திய விடுதலை போராட்டத்தில் நிகழ்த்தி காட்டினார். இந்திய சமயங்கள் தேசிய ஒருமைப்பாட்டோடு உலக ஒருமைப்பாட்டை வலியுறுத்துகிறது.


🔗 இந்தியா 2047-க்கான தொலைநோக்கு


என்றும் ஒற்றுமை


இந்திய நிலம் தனக்கு இந்தியா எனும் பெயர் பெறும் முன்னரே ஒற்றுமையை உலகுக்கு எடுத்துரைப்பதில் முனைப்பாயிருக்கிறது. 


யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று ஓருலக அறம் காண தமிழ்கூறும் நல்லுலகம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆவல் கொண்டு இருப்பதை கணியன் பூங்குன்றன் வாக்கிலே காண்கிறோம்.


'ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்' என்று உலகோர் அனைவருக்கும் ஓரறம் என ஓங்கி ஒலிக்கிறது முதுமொழிக்காஞ்சி.


தேசிய ஒருமைப்பாட்டை திவ்ய தமிழில் தேனில் ஊறிய பலாக்கனி போலே இனிபட மொழிந்தவர் பாரதி, அவர் தேசிய ஒருமைப்பாடு உடன் உலக ஒற்றுமையையும் பின்வருமாறு கூறுகிறார்,


ஒற்றுமையால் மேன்மையுண்டாம் ஒன்றையொன்று - துன்பிழைத்தல்

குற்றமென்று கண்டால் குறைவுண்டோ வாழ்வினுக்கே?


ஓர் அகத்தில் இருந்து கொண்டே இனங்களைக் கொண்டு ஒருவரையொருவர் வேறுபடுத்திக் தாக்கி கொள்ளப்படாது. "வேதாந்த சாஸ்த்ரமோ பிராமணர், நாயர், முதலை, கரடி, வெங்காயம், பூண்டு முதலிய ஸகல ஜீவன்களும் பரமாத்வாவின் அம்சங்களே அன்றி வேறல்ல என்று பல நூற்றாண்டுகளாக பறையறைந்து கொண்டு வருகிறது" 


🔗 நான் விரும்பும் சுதந்திர போராட்ட வீரர்


தேசிய ஒருமைப்பாடு


ஒருமைப்பாடு என்பது சொல்லளவில் நாங்கள் ஒன்றுபட்டவர்களே என முழங்குவதில் வெளிப்படுவதில்லை. 


ஊர் கூடி இழுக்கையில் தான் தேரே நகருமெனில் நாட்டுத்தேரை இழுக்க நாடே வேண்டுமல்லவா?


தேசிய ஒருமைப்பாடு என்பது ஒன்றுப்பட்டதொரு இனக்குழுவாக்கம். பிரிவினை வாதத்தால் பிரிவினையை பலனாக பெறுவோமே அன்றி, வேறு பெறுவதற்கு ஒன்றுமில்லை. பாரத தேசத்தின் வருங்கால சந்ததியினர் ஒற்றுமையுடனும் அன்புடனும் கீர்த்தியுடனும் நலமோடும் வாழ தேசிய ஒருமைப்பாடு மிக அவசியம். கல்வியும் செல்வமும் உப அவசியங்களே. ஆதலால் நல்லிணக்கம் செய்யுங்கள் தன்னை உயர்வாகவும் பிறரை தாழ்வாகவும் எண்ணுவதை கைவிடுங்கள். ஏற்று தாழ்வற்ற சமநிலையான சமுதாயமே தேசிய ஒருமைப்பாட்டிற்கு அடித்தளமாகும்.


🔗 2047ல் இந்தியா கட்டுரை


முடிவுரை


ஒருமைப்பாட்டின் துவக்கம் அன்பு. அன்பு ஒன்றே அனைத்திற்குமான சமமான அளவுகோலை தருகிறது. அன்பே நாட்டை நலம் செய்ய வல்லதாகிறது. யாவரையும் பகைத்தலும் பழித்தலும் வெறுத்தலும் தீண்டாமை செய்தலும் ஒருமைப்பாட்டினை சிதைப்பனவாகும்


வன்முறை நன்முறை அல்ல இன்முறை தண்முறையே எனவுணர்ந்து அன்பு செலுத்துங்கள்


இந்த புவிதனில் வாழும் மரங்களும்

இன்ப நறுமலர் பூஞ்செடிக் கூட்டமும்

அந்த மரங்களை சூழ்ந்த கொடிகளும்

ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும்

எந்த தொழில் செய்து வாழ்வனவோ?


உங்களுக்குத் தொழிலிங்கே! அன்புசெய்தல் கண்டீர்


அடுத்த கட்டுரை >

1 Comments

முந்தைய பதிவு அடுத்த பதிவு