Trending

ஞானத்தைத் தேடி 2 - எங்கே வழி

2.எங்கே வழி



காலை எழுந்த உடன் இந்த உடல் புத்துணர்ச்சியை தேடுகிறது, பிறகு உணவைத் தேடுகிறது, உண்ட உணவை செரிக்க வைக்க  வேலையை தேடுகிறது பின் களைப்பில் இரவு உறக்கத்தை தேடிப் போகிறது.



அப்படியெனில் ஆடம்பரத்தை தேடுவது யார்?


இன்பத்தை தேடுவது யார்? சுகமாக வாழ பணத்தை தேடுவது யார்?



நிச்சயமாக உடல் இவைகளை தேடுவதில்லை.


உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் சரீரமும் நம்மை அறியாமலே மரணத்தை தேடுகிறது.



உடல் ஆடம்பரத்தை தேடுவதில்லை என சர்வ நிச்சயமாக நான் சொல்வதற்கு காரணம் அது எதைத் தேடுகிறதோ அதையே உங்களிடம் கேட்கிறது.



தாகம் மூலம் நீரைக் கேட்கிறதே தவிர குளிர் பானத்தை அல்ல, பசியின் மூலம் உணவைக் கேட்கிறதே தவிர ருசியைக் கேட்கவில்லை.



வெயில் காலத்தில் குளிரையும், குளிர் காலத்தில் வெப்பத்தையும் கேட்கிறதே தவிர ஏசி-யையும் ஹீட்டரையும் கேட்கவில்லையே.



விறகடுப்பும் வீசும் தென்றலும் கூடத்தான் வெப்பத்தையும் குளிரையும் தருகிறது.



இந்த ஆடம்பரங்கள் இல்லையெனில் உடல் இவைகளைத் தான் நாடி இருக்கும்.



பணம் இவைகளை பெற உதவுகிறதே தவிர உடலுக்கு தேவையில்லை.



நல்லவேளையாக உறக்கத்தை தோற்கடிக்கும் அளவிற்கு மனிதன் இன்னும் எதையும் கண்டுபிடிக்கவில்லை.



சென்ற தொடரில் சொர்கத்தை பற்றியும் நரகத்தைப் பற்றியும் சொல்லி முடித்தேன்.



சொர்கத்திற்கு எவ்வழியே செல்ல வேண்டும் என்பதையும் நரகம் எங்கே இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்வதற்கு முன்



காஞ்சி மகா பெரியவா சொல்லும் அற்புதத்தை நாம் கேட்க கடமைப்பட்டுள்ளோம்



காஞ்சிப் பெரியர்களிடம் ஒருமுறை ஆங்கிலேயர் ஒருவர் வந்தாராம், அவர் நான் ஒரு கிறிஸ்தவன் எங்கள் மதத்திலும் சொர்கம் நரகம் நம்பிக்கை அதிகம் உண்டு, ஒரு நாள் நான் எங்கள் ஊர் பாதிரியாரிடம் கேட்டேன் கருணையே வடிவான இயேசு ஏன் நரகத்தை படைக்க வேண்டும்? அனைவரையும் சொர்கத்திற்கே அனுப்பலாமே? என்று அதற்கு அவர் என்னிடம் சரியான பதிலைச் சொல்லவில்லை நீங்கள் சொல்லுங்கள் என்றாராம்.



பெரியவர்கள் அவருக்கு மட்டுமல்லாமல் நமக்கும் இதற்கு விடை தருகிறார்.



ஒருவன் நன்மை செய்தால் பதிலுக்கு நன்மையையே பரிசாக பெறுகிறான். தீமை செய்தால் தீமையே கிடைக்கிறது.



அறிவியலும் இதனை ஏற்றுக்கொள்கிறது.


முன் செய்த குற்றத்திற்கு நரக தண்டனையையும் செய்கின்ற நன்மைக்கு சுவர்க்க ஆனந்தத்தையும் நாம் அனுபவித்துக் கொண்டே தான் இருக்கிறோம்.



கற்பனா சக்தி அதிகம் படைத்த சிலர் கொடுத்த வடிவங்களே சொர்கத்திற்கு தேவதைகளும் நரகத்திற்கு அரக்கர்களும் 



உண்மையில் இரண்டுமே ஒன்று தான் அது நீ வாழும் பூமி தான்.



பிறப்பிலிருந்து இறப்பு வரை கவலை இல்லாத ஒருவனை காணமுடியுமா? 



இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அத்தனை ஒற்றுமை உண்டு.



வாழ்க்கை முழுதும் இன்பத்திலே மூழ்கி இருப்பவனுக்கு மீண்டும் ஒரு இன்பம் வந்தால் அவனுக்கு என்ன தெரியபோகிறது.



துன்பத்தோடே துயில் கொள்பவனுக்கு மேலும் ஒரு துன்பம் வந்து விழிக்க வைத்துவிடுமா என்ன?



இன்ப வெள்ளத்தில் நீந்தும் ஒருவனுக்கு வரும் சிறு துன்பம் மலையை காட்டிலும் பெரிதாகத் தெரியும் 



அந்த துன்பத்தை அவன் மீண்டும் நீஞ்சி கடக்கும் போது வரும் இன்பம் அவன் இது வரை பார்த்திடாத அளவுக்கு இனிக்கும்



துன்பம் இருந்தாலே இன்பம் தெரிகிறது


இன்பம் இருந்தாலே துன்பம் வருகிறது



நன்மையையும் தீமையையும் கலந்துகட்டி செய்ததன் எதிர் வினையே நன்மையும் தீமையும் மனிதனிடத்தே சஞ்சரிக்கிறது.



அது எப்படி ஒருவன் பாவத்தை செய்தால் தண்டனையை அனுபவிக்கிறான். நன்மையை செய்தால் இன்பம் பெறுகிறான். என்று ஆராய்வதை நிறுத்திக் கொண்டு



பாவஞ்செய்தால் கஷ்டம் தேடி வரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.



இறைவன் எதிரே காலை நீட்டி அமர்ந்த பாட்டி இறைவனைப் பார்த்த உடனே 'என்னை மன்னித்து விடப்பா' என வேண்டிக் கொண்டு எதிர்புறம் காலை நீட்டிக் கொண்டாளாம்.



இறைவனை சிலையாய் மட்டும் பார்க்கும் பலருக்கு, இறைவன் அந்த திசையில் மட்டுந்தான் வெற்றுருவாய் புலப்படுவார்.



புண்ணியந்தேடி காசிக்கு போகாதீர்கள் வருந்தி வருவோருக்கு உணவளிக்க புண்ணியம் உங்களைத் தேடி வரும்.



சொர்க்கமும் நரகமும் வானுலகில் இல்லை.


உன் செயலினிலே உருவாகிறது.



கீழேயிருந்து கிடைக்கும் நாணயம் கூட யாசகன் தட்டிற்கு போக கூடாது என்ற எண்ணமே நரகத்திற்கு இலவசமாக அழைத்துச் செல்கிறது.



கத்தியை எடுத்து கொடுக்கும் போது கூட அதன் கூர் முனையைப் பிடித்தெடுத்து கொடுக்கும் பொன் எண்ணம் இருக்கும் இடத்தைத் தேடி சொர்கமே இறங்கி வருகிறது.



இப்போது சொல்கிறேன் சொர்க்கத்திற்கு எவ்வழியே செல்ல வேண்டுமென்று



இங்கு எத்தனையோ வழி இருந்தும் நல் வழியில் சென்றால் சொர்கத்தினை அடைந்துவிடலாம்.



நரகத்தின் வழி எனக்கு தெரிந்தாலும் உங்களுக்கு அதைச் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. (தொடரும்)


 - தீசன்

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு