Trending

திருமணம் - சிறுகதை

 திருமணம் - சிறுகதை




கல்யாண தரகர் கந்தசாமியை உடன் வந்து பார்க்கும்படி அழைத்து இருந்தார் தொழிலதிபர் சிவானந்தம் பிள்ளை.


கந்தசாமியும் பெண் வீட்டுக்கும் மாப்பிள்ளை வீட்டுக்கும் அலைந்ததுதான் மிச்சம் ஒன்றும் முடியவுமில்லை, வருமானமும் இல்லை இது கொஞ்சம் பெரிய இடம். முடித்து கொடுத்தால் கமிஷன் கொஞ்சம் அதிகமாக வரும்.புதிய உடைகள் உடுத்தி கொண்டு புறப்பட்டு விட்டார் சிவானந்தம் வீட்டுக்கு.


சிவானந்தம் மனைவியோடு வீட்டில் அமர்ந்து இருந்தார்.எடுத்த எடுப்பிலேயே விஷயத்துக்கு வந்தார் சிவானந்தம்."இந்த பாருங்க கந்தசாமி! என் பிள்ளை அருணை பற்றிதான் உங்களுக்கு தெரியுமே! நான் செய்த பிசினெஸை இன்று பத்து மடங்கு பெருக்கி வைத்திருக்கிறான்.எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் நல்ல பையனாக வளர்த்து இருக்கிறேன்.


அவனுக்கு அவன் ஆசைப்படி பெண் வேண்டும்.பணமோ நகையோ சொந்த வீடோ எதுவும் எங்களுக்கு வேண்டாம்.பெண் லட்சனமாக பண்பாடு தெரிந்த பெண்ணாக இருந்தால் போதும்.எல்லாத்துக்கும் மேலே என் பையனுக்கு அந்த பெண்ணை பிடிக்க வேண்டும். அவ்வளவுதான்" என்றார்.


"கவலைபடாதீங்க! நல்ல படியா முடிச்சிருவோம்" என்றார் கந்தசாமி.நகை பணம் போன்ற பிரச்சனைகள் இல்லாததால் நிச்சயம் இதை முடித்து விடலாம் என்று நம்பினார் கந்தசாமி.எந்த இடத்தை காட்டலாம்,யாருடைய பெண்னை சொல்லலாம் என பலவாறு யோசித்து கொண்டே வீடு வந்து சேர்ந்தார்.


செல்போன் ரிங் அடித்தது.சிவானந்தம் மனைவி பேசினார்."இது வரை பல வீட்டுக்கு சென்று பெண் பார்த்து டிபனெல்லாம் சாப்பிட்ட பிறகு பையன் பிடிக்கவில்லை என்று சொல்வது எங்களுக்கு தர்ம சங்கடமாக உள்ளது.அதனால் இனி எந்த பெண்னை காட்டினாலும் தெற்கு தெரு அங்காள பரமேஸ்வரி ஆலயத்துக்கு அழைத்து வந்திடுங்க.


கோயிலுக்கு போன மாதிரியும் இருக்கும்.பெண் பார்த்த  மாதிரியும் இருக்கும்" என்றார்."சரிம்மா என்றார்" கந்தசாமி.


அடுத்த வாரமே சிவானந்தத்துக்கு போன் செய்தார் கந்தசாமி."வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பையனை கோயிலுக்கு அழைத்து வர முடியமா?"என்று கேட்டார். ஓப்புக்கொண்டார் சிவானந்தம்.


வெள்ளிக்கிழமை காலை 10 மணி.மூவரும் கோயில் வாசலில் காரில் வந்து இறங்கினார்கள்.


பெண்னை அழைத்து வந்துவிட்டார் கந்தசாமி.கோவிலுக்கு வந்தவர்கள், தெய்வீக அழகோடு அழகுச்சிலையாய் பரமேஸ்வரியை வணங்கும் அலமேலுவை பார்த்து அதிசயித்து நின்றார்கள்.அருணும் அவள் அழகில் ஆடித்தான் போனான்.


ஒருவரை ஒருவர் நலம் விசாரித்த பின் "நான் அந்த பெண்னோடு 5 நிமிடம் தனியாக பேசலாமா?"என்று அனுமதி கேட்டான் அருண்.மகிழ்வுடன் சம்மதித்தார்கள். கோவில் பிரகாரத்தை சுற்றியப்படி பேசினார்கள் ஐந்து நிமிடம் அனுமதி கேட்டவர்கள் இருபது நிமிடம் கழித்து கணவன் மனைவி போல திரும்பினார்கள் அவர்களின் மகிழ்ச்சியான முகத்தைப் பார்த்தே அவனுக்கு சம்மதம் என்பதை தெரிந்து கொண்டார் சிவானந்தம். எல்லோருக்கும் மகிழ்ச்சி என் மகனுக்கு ஏற்ற துணையை தேடி தந்து விட்டீர்கள். உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கொடுக்கலாம். என்ன வேண்டும் சொல்லுங்கள் என்றார் சிவானந்தம் கந்தசாமியிடம் 


'இந்த திருமணத்தை நல்ல படியாக முடித்து தர வேண்டும், இதுதான் வேண்டும் எனக்கு' என்றார் கந்தசாமி. 


'என்ன சொல்றீங்க' புரியாமல் கேட்டார் சிவானந்தம்


பணம் காசுக்கு ஆசைபடாத உங்கள் மனதை புரிந்து கொண்டேன் என்னிடமும் காசு பணம் ஏதும் இல்லை அதனால் தான் என் மகளையே பெண்ணாக அழைத்து வந்தேன். என்னை மன்னித்து விடுங்கள் என்றார் தரகர். 


'அப்ப புரோக்கர் கமிஷனும் எனக்கு மிச்சம் தானா' வாய்விட்டு சிரித்தார் சிவானந்தம்.


ஜெ மாரிமுத்து


சிறுகதை போட்டி அறிவிப்பு


டிவிஆர் நினைவு சிறுகதை போட்டி மூலம் உங்களை எழுத்தாளர்களாக்கி இலக்கிய உலகில் வலம் வரச் செய்யும் பணியை தினமலர் இதழ் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்.


அது இந்த ஆண்டும் நடக்கவிருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் மட்டுமல்ல, உங்களின் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையில் நடந்த உங்களைப் பாதித்த சம்பவங்களை உங்கள் கற்பனை திறனில் சிறுகதையாக எழுதி அனுப்புங்கள். 


அது சமூகம், அறிவியல், கல்வி, க்ரைம், விளையாட்டு போன்ற எந்த துறையை சார்ந்த விஷயமாகவும் இருக்கலாம்.


அதில் உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. உங்களின் படைப்பு திறனுக்கு தக்க பரிசும் உண்டு.


நிபந்தனை : நீங்கள் எழுதும் சிறுகதை இதுவரை வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும். வேற்று மொழிக்கதையை மொழி பெயர்த்து அனுப்பக்கூடாது.


போட்டிக்கான சிறுகதைகள் Word Formatடில் A4 பக்க அளவில், தமிழ் Unicode /12 பாயிண்டில் எழுத வேண்டும்.

மூன்று பக்கம் மட்டுமே இருக்க வேண்டும்.


நீங்கள் எழுதும் கதைகளை இ-மெயிலில் மட்டுமே அனுப்ப வேண்டும். ஒவ்வொரு கதை இறுதியிலும் உங்கள் பெயர் முகவரி தொலைபேசி எண் கட்டாயம் எழுத வேண்டும். முகவரி இல்லாத கதை தேர்ந்தெடுக்க படாது.


போட்டிக்கான கதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 15 செப்டம்பர் 


இ-மெயில்: dmrtvr21@gmail.com


 மேலும் படிக்க

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு