Trending

மூட்டுவலி குணமாக வீட்டு மருத்துவம்

 

மூட்டுவலி குணமாக வீட்டு மருத்துவம்

மூட்டுவலி குணமாக வீட்டு மருத்துவம்


மூட்டு வலி என்பது திடீரென்று ஒருநாள் வரும் நோய் அல்ல. பல ஆண்டுகளாகவே  ஒரே இடத்தில் நின்று கொண்டு  இருப்பவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்பவர்களுக்கு இரத்த ஓட்டத்தில் மாறுபாடு ஏற்படுவதால் இது ஏற்படுகிறது.


ஜவளிக்கடைகளில் வேலை செய்பவர்கள், டீக்கடையில் வேலை செய்பவர்கள், இல்லத்தை நிர்வகிக்கும் பெண்கள், போக்குவரத்து காவலர்கள்,  பேருந்து நடத்துனர்கள், போன்றவர்கள் தங்கள் வாழ்நாளில் பெரும்பகுதி நின்று கொண்டே வேலை செய்ய வேண்டி உள்ளது. பேருந்து ஓட்டுனர்கள், தையல் தொழில் செய்பவர்கள், நகை தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், போன்றவர்கள் உட்கார்ந்த நிலையிலேயே வேலை செய்ய வேண்டி உள்ளது.


ஐந்து அடி உள்ள உயரம் உள்ள ஒருவருக்கு  ஐம்பது கிலோதான்  எடை இருக்க வேண்டும். ஐந்தரை அடி உயரம் உள்ள ஒருவருக்கு  அறுபத்தைந்து கிலோ வரை எடை இருக்கலாம். இதை மீறி ஒருவர் என்பது கிலோ, நூறு கிலோ இருந்தால் அந்த எடையை தாங்க வேண்டியது கால் மூட்டுகளே. மூட்டு வலிக்கு முதல் காரணம் உடல் பருமன் மட்டுமே.


உடலில் எலும்புகளை இணைக்கும் இடம்தான் மூட்டு. நம் உடலில் ஆறு இடங்களில் மூட்டுகள் உள்ளன. அவைகள் கை மூட்டு, கால் மூட்டு, மணிக்கட்டு, தோள்பட்டை, இடுப்பு மூட்டு,  கால் பாத மூட்டு என்பன ஆகும். 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலிக்கான காரணமும் தீர்வும் தரப்பட்டுள்ளது. நீங்கள் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களாக இருநாதால் அதைக் காண்க.


உடனடி மருத்துவம்


மூட்டுவலி என்பது உடனடியாக தீவிர நிலையை எட்டாது. மூட்டு வலி அறிகுறி தோன்றியவுடன் அதைத் தாங்கி கொண்டு, வாழ்க்கையை ஓட்டக்கூடாது. உடனடியாக அதற்கான சிகிச்சையை தொடங்க வேண்டும். அது போல எந்த மருந்து எடுத்தாலும் உடனடியாக ஒரே நாளில் குணமாகிவிடாது.


மூட்டு வலியை தற்காலிகமாக நிறுத்தும் வலி நிவாரணிகள், களிம்புகள் கடைகளில் கிடைக்கின்றன. அவையெல்லாம்  வலியை உணரும், மூளைக்கும் செல்லும் நரம்பை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்வதாகவே இருக்கும். அது நிரந்தர தீர்வு அல்ல.


வாரம் ஒருநாள் சனிக்கிழமை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதை தமிழர்கள் வழக்கமாக கொண்டு இருந்தார்கள். உடல் முழுவதும் குறிப்பாக மூட்டுகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது எண்ணெய் சருமத்தில் ஊடுருவி செயல்படவும் மிருதுவாகவும் விரைப்பாகவும் இல்லாமல் பாதுகாக்கிறது.


தொழிற்சாலைகளில் இயந்திரங்களுக்கு லூப்ரிகண்ட் உதவுவது போலவும்,  சாலையில் ஓடும் வாகனங்களுக்கு ஆயில் தேவைப்படுவது போலவும், மூட்டுகளுக்கு எண்ணெய் மசாஜ் அவசியமாகிறது. அது விளக்கெண்ணை ஆக இருக்கலாம் வேப்பெண்ணெய் தேங்காய் எண்ணெய் கடுகு எண்ணெய் எது வேண்டுமானாலும் இருக்கலாம். இதனால் மூட்டுகளில் இரத்த ஓட்டம் அதிகமாகிறது.


நின்று கொண்டே இருப்பவர்களுக்கு காலில் இரத்தம் மேலெழும்பி இதயத்துக்கு செல்வதில் அழுத்த குறைபாடு ஏற்படுகிறது. ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தாலும் இரத்த ஓட்டம் தடைபட்டு மரத்து போகிறது. மரத்து போன இடத்தில் சதை சிதைவு ஏற்படுகிறது. தடைபடும் இரத்தம் இரத்தக் குழாய் நரம்புகளில் புடைப்பை ஏற்படுத்தி வெரிகோஸ் வெயின் என்னும் நரம்பு சுருட்டல் நோயை உண்டாக்குகிறது.


இரத்த ஓட்டம் முறையாக இருக்க வேண்டுமானால் நடைபயிற்சி, மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டம், நீச்சல் பயிற்சி போன்றவற்றில் ஏதாவது ஒன்று அவசியமானது ஆகும். நீரிழிவு நோயாளிகளுக்கு எலும்பு தேய்மானம் அதிகம் என்பதால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் கவனமாக செயல்படவேண்டும்.


உறுப்புகள் அசைந்து கொண்டே இருக்க வேண்டும். உட்கார்ந்தே இருப்பவர்கள் எழுந்து சிறிது தூரம் நடக்க வேண்டும். நின்று கொண்டே இருப்பவர்கள் சிறிது நேரம் உட்கார வேண்டும்.


மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவது முதல் அறிகுறி. மூட்டுக்களின் மேல் பகுதி சிவந்து காணப்படும். வீக்கம் நான்கு வாரங்கள் ஆகியும் குறையாமல் இருந்தால் அடுத்த கட்டமாக, உட்காருவதில், நடப்பதில் மூட்டுகளை அசைப்பது சிரமமாக இருக்கும்.


மூட்டுவலி எதனால் ஏற்படுகிறது


உடல் பருமன், உழைப்பின்மை, சரிவர உடற்பயிற்சி செய்யாதது இதய நோய், சர்க்கரை நோய் போன்றவை மூட்டு வலிக்கு முக்கிய காரணமாகும்.


வாய்வினால் கூட மூட்டு வலி வரலாம். வாய்வு நீர் மூட்டுகளில் தேங்கி வலி ஏற்படலாம். இப்படிப்பட்டவர்கள் பயறு வகைகள் பருப்பு வகைகள் கிழங்கு வகைகள் போன்றவற்றை உண்ணக்கூடாது. கீழ் வாய்வு என்பது வயிறு உப்புதல், செரிமான கோளாறு மட்டுமின்றி மூட்டு எரிச்சலையும் வலியையும் உண்டாக்குகிறது. அதற்கு பூண்டு அல்லது பூண்டு மாத்திரைகள் மற்றும் பெருங்காயத்தூள் போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம். எண்ணெயில் பொறித்த உணவுகள், கார உணவுகள் கூட மூட்டு வலிக்கு காரணமாக கூறப்படுகிறது.


வீட்டு மருத்துவம்


நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெலிதாக சீவி, இரவு முழுவதும் குளிர்ந்த நீரில் ஊற வைத்து, அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க மூட்டு வலி குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


ஒமேகா 3 உள்ள காட்லிவர் ஆயில் மூட்டு தேய்மானத்தை தடுக்கும் சைனோவியல் என்ற பசை போன்ற திரவம் சுரக்க உதவுகிறது.


இரவு முழுவதும் ஒரு ஸ்பூன் கருப்பு எள்ளை ஊறவைத்து காலையில் அந்த ஊறிய எள்ளை சாப்பிடுவதாலும் மூட்டு வலி குறைய வாய்ப்புள்ளது.


இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து தினமும் இருவேளை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.


தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை லேசாக சூடு காட்டி அதில் கற்பூரத்தை கலந்து தேய்த்து வந்தால் விரைவில் மூட்டு வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.


மனிதனுக்கு தேவை உணவு என்பது போல்,  எலும்புக்கு உணவு கால்சியம்தான். கால்சியம் குறைபாடே எலும்புகள் வலுவிழக்க காரணம். கர்பகாலத்தில் கால்சியம் சேர்த்துக் கொள்ளாத பெண்களின் குழந்தைகளுக்கு கூட எலும்பு வலு இழக்க வாய்ப்புண்டு.


உடல் பருமன் ஒரு காரணி


உடல் எடையை தாங்கும் எலும்புகள் பாதிக்கப்பட முதல் காரணம் உடல் பருமன். உடல் பருமனுக்கு முக்கிய காரணம் ஜங்க் ஃபூட் வகைகள். இது எதிர்ப்பு சக்தியை குறைத்து மூட்டை வலுவிழக்க வைக்கிறது. எலும்புகளையும் மூட்டுகளையும் தசையோடு சேர்த்து பிடித்துக் கொள்ள உடலுக்கு தேவைப்படுவது கொலாஜன் எனும் புரதம். கார்டிலேஜ் என்ற வழுவழுப்பு தரும் திரவம் உற்பத்தியாக ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் உதவுகிறது.


மாதவிடாய் என்கின்ற இயற்கை நிகழ்வு பெண்களுக்கு இருப்பதால் ஒவ்வொரு மாதமும் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும். அதுவும் மாதவிடாய் முடியும் காலமான மோனாபாஸ் சமயத்தில் இதன் உற்பத்தி மிகவும் குறையும். இதனால் பெண்களுக்கு மூட்டு வலி வரும் வாய்ப்பு அதிகம். உடல் பருமன் விஷயத்திலும் அதிக கவனத்தை பெண்கள் செலுத்தாததால் முட்டு வலியால் பாதிக்கப்படுவது அதிகம் பெண்களே.


குடும்பப் பொறுப்பை சுமக்கும் பெண்களை பாதிக்கும் எலும்பு நோய் சியாடிகா ஆகும். சியாடிகா என்பது முதுகில் ஆரம்பித்து காலின் பின்பகுதியில் குதிகால் வரை நீளும் ஒரு நரம்பின் பெயர். உடலின் நீளமான நரம்பு இதுதான். இந்த நரம்பு பாதிப்பதால் கால் வலுவிழக்கிறது. முதுகெலும்பின் அசையும் மூட்டுகளில் வீக்கம் உண்டாகி எலும்புகளுக்கு இடையே உள்ள ஜவ்வு பாதிக்கிறது.


தண்டுவடத்தை ஊடுறுவும் நரம்புகள் அழுத்தம் பெற்று சுருங்கி இரத்த ஓட்டம் பாதிப்படையும். நரம்புகள் வலு இழந்து வலி உண்டாகும். வலி எரிச்சலாக மாறும். உட்காரவும் எழவும் கஷ்டமாக இருக்கும். காலில் நரம்பை பிடித்து இழுப்பது போன்ற உணர்வு இருக்கும். ஏதோ வாய்வு கோளாறு என்று கவனிக்காமல் விட்டால் தொடை மரத்து போகும். மரத்து போவது என்பது இரத்த ஓட்டத்தின் மோசமான அறிகுறி.


வெரிகோஸ் வெயின்


தொடை நரம்புகள் பாம்புகளை போல சுருட்டி கொள்வதாலோ, சங்கிலியை போல பிணைத்து கொள்வதாலோ, இரத்தம் தடைபட்டு மெல்லிய இரத்த குழாய்கள் வீங்கி பச்சை நரம்புகள், தோல் மேல்பாகத்தில் தெரிய ஆரம்பிக்கின்றன. இரத்தம் மேலேறி செல்லமுடியாமல் தேங்குவதால் இரத்தம் ஓடும் நிலையிலிருந்து உறையும் நிலைக்கு செல்கிறது. இதைத்தான் வெரிகோஸ் வெயின் எனக் கூறுகிறோம்.


உடற்பயிற்சிகள் சூடான குளிரான பொருட்களால் ஒத்தடம் கொடுப்பது என்பன மரத்து போவதை குறைக்க உதவும்.


ஆப்பிள் சைடர் வினிகர், கற்றாழை அல்லது கற்றாழை ஜெல்,  மெலிதாக  சீவிய கேரட்  மூன்றையும் சூடு காட்டி ஜெல் போல வைத்துக் கொண்டு, கீழிலிருந்து மேலாக காலுக்கு கீழ் பகுதியில்  நரம்பு புடைப்பு உள்ள பகுதியில் தடவி,  பின்னர் வெது வெதுப்பான நீரில் கழுவி வந்தால் வெரிகோஸ் வெயின் குறைய ஆரம்பிக்கும்.


தொடை நரம்பு சுருட்டல் நோய்க்கு ஒரு எளிய வைத்தியம்


கடைகளில் கேட்டால் திப்பிலி கிடைக்கும். திப்பிலியை 100 கிராம் வாங்கிக் கொள்ள வேண்டும். சுக்கு 100 கிராம் வாங்கிக்  கொள்ள வேண்டும். கடுகு எண்ணெய் Mustard Oil 200 மிலி வாங்கிக் கொள்ள வேண்டும். திப்பிலியையும் சுக்கையும் பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும்.


கடுகு எண்ணெயை வானலியில் ஊற்றி சூடு வந்ததும் இந்த பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக தூவ வேண்டும். முதலில் மஞ்சள் நிறமாக மாறும். பின்னர் பொன் நிறமாக மாறும் போது வாசனை வரும். அப்போது தீயை அனைத்து தைலத்தை  வடிகட்டி வைத்துக் கொள்ளவும். தொடை நரம்பில் ஓடவேண்டிய ரத்தம் தேங்கி உறைவதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. சில சமயம் தொடை மரத்து போகிறது.  இந்த எண்ணெயை நீவி விடுவதுபோல் மேலும் கீழும் தேய்த்து மசாஜ் செய்வதால் படிப்படியாக குணமாகும். மீண்டும் சூடுபடுத்தி தேய்க்க வேண்டும். வெது வெதுப்பான நீரை ஊற்றி கழுவ வேண்டும்.


ஜாதிக்காய் வைத்தியம்


இடுப்பிலிருந்து கால் பாதம் வரை ஏற்படும் நரம்பு சுருட்டல் மற்றும் நரம்பு பலவீன பிரச்சனைக்கு ஒரு எளிய வைத்தியம்.


பத்து அல்லது பணிரெண்டு ஜாதிக்காய் வாங்கிக் கொள்ள வேண்டும். வேப்பெண்ணெய் 100 மிலி வாங்கிக் கொள்ள வேண்டும்.  ஜாதிக்காயை நசுக்கி பவுடராக ஆக்கிக் கொள்ள வேண்டும்.  வானலியில் வேப்பெண்ணெயை ஊற்றி ஜாதிக்காய் பவுடரை சேர்க்க வேண்டும். தைலம் போல வந்தவுடன் அதை பாட்டிலில் சேமித்து கால் மூட்டு மற்றும் பின் கால் மற்றும் தொடை நரம்புகளில் தடவி 2 மணி நேரம் விட்டுவிட வேண்டும். பின்னர் சுடுநீர் மூலம் கழுவ வேண்டும். சில நாட்களில் நல்ல பலன் கிடைக்கும்.


காலையில் எழுந்ததும் சிறிது விளக்கெண்ணையை அதாவது ஆமணக்கு எண்ணெயை சூடு செய்து வீக்கம் வலி உள்ள இடத்தில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பின்பு பத்து நிமிடம் அந்த எண்ணெய் தோலில் ஊடுருவி எலும்பு பகுதிக்கு செல்லுமாறு விட்டுவிட வேண்டும்.


கல் உப்பை வானலியில் ஒரு பிடி போட்டு வறுத்து ஒரு மெல்லிய துணியில் சுற்றி வலி உள்ள பகுதிகளில் ஒற்றி எடுக்க வேண்டும். இது போல் கோதுமை தவிடு, அரிசித் தவிடு போன்றவற்றை சூடுபடுத்தி ஒத்தடம் கொடுக்கலாம். இது இரத்த ஓட்டத்தை விரைவுபடுத்த உதவும்.


வேப்பெண்ணெய்,  விளக்கெண்ணை,  தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்து சூடு காட்டி இரவில் வலி உள்ள  இடத்தில்  தடவிக்கொள்ளலாம். காலை வெறும் வயிற்றில் இந்த எண்ணெயை ஒரு ஸ்பூன் குடித்து வரலாம்.


மூட்டு வீக்கம் உள்ள இடங்களில் ஐஸ் கட்டியை கொண்டு ஒத்தடம் கொடுப்பது, வீக்கம் குறைந்து நல்ல பலனை தருவதாக பெரும்பாலோர் கருத்து தெரிவிக்கின்றனர்.


எளிய உணவுகள்


எலும்பு தேய்மானத்துக்கு கால்சியம் அதிகம் உள்ள பால், பாதாம்,  கொண்டைக்கடலை,  கீரைவகைகள் அத்திப்பழம், ராகி, ஆரஞ்ச் பழம்  போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.


எலும்பு பலம் இழப்பதற்கு விட்டமின் டி குறைபாடு ஒரு முக்கிய காரணமாகும். விட்டமின் டி சத்தினை எளிதில் பெற சூரிய ஒளியில் நாற்பது நிமிடம் வாக்கிங் செல்வது எளிமையான செலவில்லாத ஒரு தீர்வாகும்.


புளிய இலை, நொச்சி இலை, துளசி இலை, நுனா இலை, அத்தி இலை, வேப்ப இலை, ஊமத்தை இலை என ஏதாவது ஒரு இலையை மஞ்சள் சேர்த்து சுடு நீரில் காய்ச்சி, மூட்டு பாதித்த பகுதிகளில் பயன்படுத்தும் முறை கிராமங்களில் உள்ளது.


புற்று மண்ணை எடுத்து வீக்கம் வலி உள்ள இடத்தில் பூசி, இரண்டு பணி நேரம் காய விட்டு, குளிக்கும் முறையில் மூட்டு வலி குறைவதாக கிராமங்களில் நம்புகிறார்கள்.


சுருக்க காலுறைகள் என சொல்லப்படும் பேண்டுகளை சாக்ஸ் போல அணிவதால் இரத்த ஓட்டம் தொடர்ந்து தூண்டப்பட்டு மூட்டு வலி குறைகிறது.


நிலக்கடலை பாதாம் வறுகடலை எள் போன்றவற்றை ஒன்றாக  பொடி செய்து வெல்லப்பாகில் நெய் ஊற்றி ஊட்டச்சத்து உருண்டைகளாக பிடித்து உண்ணும்போது எலும்புக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து மூட்டு வலி குறைகிறது.


முடிவு


மூட்டு வலி வந்தவர்கள் அதிலிருந்து விடுபட அறுவை சிகிச்சை கூட தேவைப்படும். சரி மூட்டு வலி இனி நமக்கு வரக்கூடாது என நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?


உடல் எடை ஏறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது ஜங்க் ஃபூட்ஸ், பாக்கெட் உணவுகள், எண்ணெயில் பொரித்தவை, கேக், கூல்டிரிங்ஸ், மாவுச்சத்து உணவுகள் சாப்பிடக் கூடாது.


அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.


நடைப்பயிற்சி அல்லது சைக்கிளிங் அல்லது நீச்சல் போன்ற உடல் அசையும் பயிற்சிகளை தினமும் நாற்பது நிமிடம் எடுக்க வேண்டும்.


வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அல்லது மூட்டுகள் அனைத்திலும் தினமும் தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்வது போல தேய்த்து விட வேண்டும்.


சூரிய ஒளியில் உடல் படுமாறு பதினைந்து நிமிடமாவது இருக்க வேண்டும்.


கால்சியம் உள்ள பொருட்களை தவறாது சேர்த்து கொள்ள வேண்டும்.


இது போதும். வலி இல்லாமல் வாழ்வதற்கு.


மேலும் படிக்க


> பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலிக்கான தீர்வு

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு