Trending

பிட்காயின் என்றால் என்ன?

 


கடந்த டிசம்பர் பதினைந்தாம் தேதி முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 69 பேர் வீடுகள், நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. இரண்டு கோடி ரொக்கம், ஒரு கிலோ தங்கம், 30 கிலோ வெள்ளி மற்றும் சொத்து பத்திரங்கள் கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டது. அந்த செய்தி குறிப்பில் அவரது மகனும் மருமகளும் 50 கோடி மதிப்பிலான பிட்காயின் வாங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதை தங்கமணி மறுத்து விட்டார்.


பிட்காயின் என்பதை தான் பார்த்ததே இல்லை என்று கூறினார். அவர் சொன்னதில் கடைசி வரி உண்மைதான்.


பிட்காயின் என்று ஒரு காயின் இல்லை. பிட்காயினை ரூபாய் நோட்டு போலவோ,

நாணயத்தை போலவோ கண்களால் பார்க்க முடியாது. அது ஒரு டிஜிட்டல் கரன்சி. கிரிப்டோ கரன்சி. கிரிப்டோ என்றால் hidden மறைவான என்று பொருள். இந்திய ரூபாய் ஆனாலும் சரி, அமெரிக்க டாலர் ஆனாலும் சரி, குவைத்தின் தினார் ஆனாலும் சரி, சவுதியின் ரியால் ஆனாலும் சரி, அதை கண்ணால் பார்க்கலாம், கையால் தொடலாம். இந்திய நாணயத்தை உண்டியலில் போட்டு கூட சேமிக்கலாம். ஆனால் கிரிப்டோ கரன்சி என்று சொல்லப்படுகின்ற Bitcoin, Etherium,binans, XRP,DOT,Solana,Cardano,

Tether,Doge போன்றவை டிஜிட்டல் கரன்சிகள். இணையதள வசதியுள்ள கம்ப்யூட்டர் லேப்டாப், செல்போன் போன்றவற்றில் Walletல் சேமித்து வைக்ககூடியவை. இது மட்டும்தான் கிரிப்டோ கரன்சியா? என்றால் இல்லை.


வடிவேலு நானும் ரவடிதான் என்று சொல்வது போல இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கரன்சிகள் உள்ளன. அதற்கு உருவம் கிடையாது. இந்த காயின் வாங்குபவர்களுக்கு வேலட்டை உருவாக்கி தர நிறைய நிறுவனங்கள் உள்ளன. கிரிப்டோ கரன்சி மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்த சர்வரோ ஒரு அமைப்போ கிடையாது. இரண்டு அக்கவுண்டுகளுக்குள்ளாகவோ,இரண்டு தனிநபர்கள் மூலமாகவோ பரிவர்த்தனை முடிந்து விடுகிறது. இந்தியாவில் google pay, phone pay, samsung pay போன்ற degital பிளேட்ஃபார்ம்கள் உள்ளன. கூகுல் பே மூலம் ஒருவருக்கு பணம் அனுப்பினால், முதலில் பணம் அனுப்புவரது வங்கிக்கணக்கு சர்வரால் சரிபார்க்கப்படுகிறது. பின்னர் பணம் பெறுபவரது வங்கிக்கணக்கு சரிபார்க்கப்படுகிறது. 


ஒவ்வொரு பரிவர்த்தனையும் கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பின் சம்மதத்துடன் பணம் இடம் மாறுகிறது. இரண்டு வங்கிகளையும் ரிசர்வ் வங்கி மேலாண்மை செய்கிறது. இந்திய ரூபாயை ரிசர்வ் வங்கி அச்சிட்டு வங்கிகள் முலம் டிஸ்டிரிபியூட் செய்கிறது. காகிதத்தில் அடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கு அதில் உள்ள தொகையை தர அந்த நோட்டிலேயே ரிசர்வ் வங்கி கவர்னர் உறுதி அளிக்கிறார். இந்திய ரூபாய் இந்தியாவில் மட்டும்தான் செல்லும்.அமெரிக்க டாலர் அமெரிக்காவில் மட்டும் தான் செல்லும். இந்திய ரூபாயை அமெரிக்காவில் செலவழிக்க வேண்டுமானால் இந்திய ரூபாயை அமெரிக்க டாலராக எக்ஸ்சேஞ்ச் சென்டரில் மாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் பிட்காயின் போன்றவை உலகம் முழுவதும் செல்லும். அனுப்புபவருக்கும் பெறுபவருக்கும் இடையே டீலிங் முடிந்து விடுகிறது. கூகுல் பே போன்றவையும் டிஜிட்டல் கரன்சிகள் என்றாலும் அதை பெறுபவர் காகித கரன்சிகளாக அதை பெற முடிகிறது. இன்னொன்று, இப்படிப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு இந்திய வங்கிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டணங்களை வசூலிக்கின்றன. பண நடமாட்டத்தை இன்கம்டாக்ஸ் நிறுவணம் ஆதார் கார்டு மூலமும் பான் கார்டு மூலமாகவும் கண்காணிக்கிறது. அதனால்,


தீவிரவாதிகள்,கருப்பு பணக்காரர்கள், மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகள் 

போன்றோருக்கு பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் தெய்வமாக தெரிகிறது. பத்து கோடி வருமானத்துக்கு 

மூன்று கோடி இந்தியாவில் வருமானவரி கட்ட வேண்டும். அப்படி கட்டாத பணமே கருப்பு பணமாகிறது. சட்டப்படி சம்பாதிக்காத கருப்பு பணத்தை முதலீடு செய்ய ஒரு காலத்தில் சுவிஸ் வங்கி பயன்பட்டது. இப்போது உலகளாவிய ஒரு ஒப்பந்தம் மூலம் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள கருப்புப்பணக்காரர்கள் பட்டியல் அரசின் கைக்கு கிடைத்து விடுகிறது.அதனால் அளவுக்கு மீறிய இல்லீகல் பணம் வைத்திருப்பவர்களின்

சொர்க்கபுரியாக கிரிப்டோகரன்சிகள் மாறிவிட்டன.


2008,2009ஆம் ஆண்டுகளில் ஜப்பான் நாட்டவரான சட்டோசி நகமோட்டா Satoshi Nakomota என்பவரால் பிட்காயின் உருவாக்கப்பட்டது. அரசுக்கோ மற்றவருக்கோ தெரியாமல் எந்த பரிவர்த்தனை கட்டணமும் இல்லாமல் ஒரு பரிமாற்ற முறையை உருவாக்க வேண்டும் என்ற அவரது ஆசை அதன் மூலம் நிறைவேறியது. இதில் கணக்கு தொடங்குபவருக்கு வேலட் ஒன்று உருவாக்கி தரப்படுகிறது. அதில் அவரது தரவுகள் சேமிக்கப்படுகிறது. கிரிப்டோ கரன்சியில் வேலட் உருவாக்கி காயின் சேமிக்க ஆர்கனைசிங் புரோக்கர்கள் உள்ளார்கள்.


பிளாக் செயின் முறையில் இதில் டேட்டா சேமிக்கப்படுகிறது. இதில் டேட்டா சேகரிக்க சங்கிலி தொடர் கட்டங்கள்( blog ) உள்ளன. புதிய கட்டத்துடன் பழைய கட்டத்தை இனைக்க HASH என்ற தகவல் துண்டு செயல்படுகிறது.


பரிவர்த்தனைகள் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு கம்ப்யூட்டர்களில் இணைக்கப்படுகிறது.இதற்கு Nodes என்று பெயர்.பிளாக் செயினின் மற்றொரு சிறப்பு Peer to Peer P2P வலைப்பின்னல் கொண்டுஇணைக்கப்படுகிறது. இதற்கு Server கிடையாது. பரிவர்த்தனைகள் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே தெரியும். பிளாக்கில் லெட்ஜர்  உள்ள அனைவருக்கும் பப்ளிக் கீ கொடுக்கப்படும். Hash மூலம் அடுத்த கட்டத்துக்கு இணையும் போது செப்பரேட் கீ கொடுக்கப்படுகிறது. Node மூலம் டிரான்சேக்ஷன் முடிவடைகிறது. ஒவ்வொரு பரிவர்த்தனை முடிவிலும் ஒரு புதிர் Puzzle உருவாக்கப்படுகிறது. அதை விடுவிப்பவருக்கு 12.5 பிட்காயின் ரிவார்டாக கொடுக்கப்படுகிறது. புதிய காயின் உருவாக்குவது எளிதான காரியமல்ல. இதற்கு Mining என்று பெயர்.


Puzzle என்பது ஒரு டாஸ்க். டாஸ்க் என்றதும் பிக்பாஸ் டாஸ்க் போல மொக்கையாக இருக்கும் என நினைத்து விடாதீர்கள்.


உலகம் முழுவதும் உள்ள கணித மற்றும் கணினி மூளை உள்ளவர்களால் இது விடுவிக்கப்படுகிறது. இதற்கு SHA-256 போன்ற சூப்பர் கம்ப்யூட்டர்கள் மூலம் பலலட்சம் செலவிடப்படுகிறது.


ஒரு நாளைக்கு 144 பிளாக்குகள் மட்டுமே உருவாக்கலாம். ஒரு பிளாக்கிற்கு 12.5 பிட்காயின் என்றால் 1800 காயின் மட்டுமே உருவாகும். ஆனால் தற்பொழுது பிளாக்குக்கு 6.25 பிட்காயின் என மாற்றப்பட்டுள்ளது.அதனால் ஆபரேஷன் அதிகம் நடந்தாலோ முதலீடு அதிகரித்தாலோ பிட்காயின் மதிப்பு கூடுகிறது.

மொத்தமே 21 மில்லியன் பிட்காயின் மட்டுமே உருவாக்க Software  அமைக்கப்பட்டுள்ளது. அதை யாராலும் மாற்ற முடியாது. 


அதன் பின்னர் மார்க்கெட்டில் உள்ள காயினை வைத்தே வரவு செலவு நடத்த முடியும்.

இது ஒரு மாய உலகம்.எப்போது ஏறும்,எப்போது இறங்கும், யாருக்கும் தெரியாது. இரண்டு வருடமாக கொரனா பரவியது. அது ஒரு வைரஸ். அது போல கம்ப்யூட்டரை செயல் இழக்க வைப்பததற்கு பெயரும் வைரஸ்தான். வா என்றால் வருகிறோம், போ என்றால் போகிறோம் அது தமிழ் மொழி. அதுபோல கம்ப்யூட்டருக்கும் ஒரு மொழி language உள்ளது. அந்த மொழியில் நாம் கொடுக்கும் Command அடிப்படையில் கம்ப்யூட்டர் Programming ஆகி செயல்படும். அதற்கு HTML Coding என பெயர்.


எல்லா தகவலையும் அழி என ஒரு கமான்ட் யாரோ ஒருவரால் கொடுக்கப்பட்டு நாம் சேமித்து வைத்திருக்கும் எல்லா தகவலும் அழிந்தால் அதைத்தான் வைரஸ் என்கிறோம். இப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களை Hackers என்போம்.


ஒரு மெசேஜ் அல்லது ஒரு லிங்க் மூலம் அது அனுப்பப்பட்டு கம்ப்யூட்டரை செயலிழக்க வைப்பார்கள். அதை மீட்டு கொண்டு வர ஒரு தொகையை செலுத்த கூறுவார்கள். அதுவும் யார் என கண்டுபிடிக்க முடியாத அளவு அக்கவுண்டிங் மணி அல்லாத கிரிப்டோ கரன்சியில் செலுத்த சொல்வார்கள்.


இப்படிப்பட்டவர்களுக்கு கணினி சம்பந்தப்பட்ட அறிவு மிகுதியாக இருக்கும்.


அதுபோல நாம் வைத்திருக்கும் பிட்காயின் வேலட்களை ஹேக்கர்கள் அழிக்கவும் வாய்ப்புள்ளது.


2016 ஆகஸ்டில் பிட்காயின் பரிமாற்ற கூடமான BITFINEX ல் 12000 BTC  ஹேக்கர்களால் களவாடப்படடதால் இழுத்து மூடப்பட்டது.


2014ல் பிட்காயின் பரிமாற்ற சந்தை Metgox திவால் ஆனது. சேமித்து வைக்கப்பட்டு இருந்த 473 மில்லியன் பிட்காயின் ஹேக்கர்களால் திருடப்பட்டதே அதற்கு காரணம். 2018ல் மட்டும் 98000 பிட்காயின்

ஹேக்கர்களிடம் களவு போனது. 


2020ல் பெங்களூரில் கிருஷ்ன ரமேஷ் என்பவர் darknet மூலம் போதை பொருள் விற்பதை சிட்டி போலிசார் கண்டுபிடித்தனர். 


அவரது வேலட்டில் 32 பிட்காயின் இருந்தது. அதை மீட்க போலிசார் ஒரு பிட்காயின் வேலட்டை உருவாக்க முயன்றனர். ஆனால் பப்ளிக் கீ தெரியாததால் அவர்களால் கடைசி வரை மீட்க முடியவில்லை.


பிட்காயின் முதலீடு பாதுகாப்பானதா? என்றால் நிச்சயமாக சொல்வேன் இதில் எந்த பாதுகாப்பும் இல்லை. கவுன்டமணி ஒரு படத்தில் தனக்கு லாட்டரி சீட்டு விழுந்ததாக என்னிக் கொண்டு" நான் ஏதாவது வாங்கியே ஆகனுமேடா இந்த தெரு என்ன விலை? இந்த ஊர் என்ன விலை?" என கேட்பார். அது போல கருப்பு பணக்காரர்கள் அரசுக்கு தெரியாமல் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யத்துடிக்கிறார்கள். அப்படித்தான் அதிகமாக பிட்காயின் வியாபாரம் நடக்கிறது. 10 ரூபாய் லாட்டரி சீட்டை ஒரு லட்சம் பேரிடம் விற்று 10 லட்சம் திரட்டி அதை ஒருவனிடம் பரிசாக கொடுப்பார்கள்.


ஒருவனுக்கு லாபம்,ஒரு லட்சம் பேருக்கு நட்டம்.

எலக்டிரிக் கார் விற்பனையில் முதலிடம் வகிக்கும் அமெரிக்க கோடீஸ்வரர் டெஸ்லா  CEO  ஏலன் மாஸ்க் பிட்காயினில் பத்தாயிரம் டாலர் முதலீடு செய்த போது அதன் விலை தாறுமாறாக ஏறியது. இதை பார்த்து பிட்காயினில் முதலீடு செய்தவர்கள் ஏராளம் பேர்.ஏறிய விலையில் வாங்கிய பிட்காயினை விற்று லாபம் பார்த்துவிட்டார் ஏலன் மாஸ்க் இவரது செயலால் பிட்காயின் விலை வீழ்ந்தது. முதலீட்டாளர்கள் கடும் நஷ்டம் அடைந்தனர். 2010ல் ஒரு டாலர் முதல் போட்டவர்களுக்கு 2021ல் 46000 டாலர் கிடைக்கவில்லையா? என கேட்கலாம்.


50 கிலோ எடை உள்ளவன் 60 கிலோ ஆனால் அது வளர்ச்சி. 50 கிலோ எடை உள்ளவன் 500 கிலோ ஆனால் அது வியாதி. பலூனை ஊதி அது பெரிதாகி கொண்டே போகும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். இறுதியில் அது வெடித்து சிதறிதான் போகும்.


ஒருவனது வேலட்டில் 50 பிட்காயின் இருப்பதாக வைத்துக்கொள்வோம். மறுநாள் காலை அதே வேலட்டில் 0 Zero  என்று காட்டினால் அதை யாரிடம் முறையீடு செய்ய முடியும். கம்ப்யூட்டர்ருக்கு என்று தனி மூளை கிடையாது. Inputக்கு ஏற்ற Output வரும். எந்திரன் படத்தில் வசீகரனின் அம்மா சிட்டி ரோபோவிடம் டி வி யை போடு என்றதும் டி வியை போட்டு உடைத்துவிடும். கம்ப்யூட்டரை மட்டுமே நம்பி எந்த சான்றும் இல்லாமல் ஒரு முதலீட்டை செய்ய முடியாது.


அதனால்தான் பொருளாதாரத்துக்கு நோபல் பரிசு பெற்ற இராபர்ட் சில்லர்,ஜோசப் ஸ்டித், ரிச்சர்ட் தேலர்,பால் கிரக்மேன் போன்றோர் பிட்காயின் என்பது பெரிய மோசடி என்கிறார்கள். 


நீரில் உண்டாகும் Pubbles போன்றதுதான் பிட்காயின் வளர்ச்சி என்கிறார்கள்.

20 ரூபாய் தக்காளி 120 விற்கும்போது மகிழ்ச்சி அடையும் வியாபாரி,அதே தக்காளி 120ல் இருந்து 20 ஆகும்போது வருத்தப்பட்டுத்தானே ஆகவேண்டும்?

சந்தை அபாயங்களுக்கு உட்பட்பது என கூறப்படும் Mutual fund முதலீடுகளில் கூட minimum guarantee உள்ளது. அதன் பிரச்சினைகளை தீர்க்க கட்டுப்பாட்டு வாரியம் உள்ளது. சீன மக்கள் வங்கி People bank of China 2013 ஆம் ஆண்டே பிட்காயினை தடை செய்துவிட்டது. இந்த ஆண்டு முதல் முற்றிலும் எந்த பரிவர்த்தனையும் செய்ய இயலாத வகையில் தடை செய்து விட்டது. சீனாக்கரனுக்கு இல்லாத மூளையா? .அமெரிக்காவில் பிட்காயினை பயண்படுத்தி ஒரு பீஸா வாங்க ஐந்து நிமிடம் ஆகிறது. அதனால் மக்கள் பயண்பாடு குறைந்து விட்டது. இந்தியா இதை ஒழுங்குபடுத்த ஒரு சட்டத்தை தயார் செய்து உள்ளது.


2011ல் பத்து டாலராக இருந்த பிட்காயின் 2021 ல் நாலாயிரத்து அறுநூறு மடங்கு ஏறிவிட்டது. 2013ல் 200 டாலராகவும், 2014ல்

1200 டாலராக ஏறி 600 டாலராக குறைந்தது. 2017ல் 20000 டாலராக இருந்த பிட்காயின் 2020 கொரானா காலத்தில் 6900 டாலராக குறைந்தது. இந்த வருடம் 2021ல் ஆரம்பத்தில் 40000 டாலரில் தொடங்கி மத்தியில் 60000 டாலர் வரை ஏறி மீண்டும் 46000 டாலராக குறைந்து விட்டது.

ஜனவரி மாதம் வாங்கியவனுக்கு லாபம். ஜூலை மாதம் வாங்கியவனுக்கு நட்டம். புரோக்கர்கள் லாபத்தை மட்டுமே சொல்வார்கள்.


ஒரு கதை சொல்வார்கள். ஒருவனிடம் பக்கத்து வீட்டுக்காரன் சொம்பு ஒன்றை இரவலாக கேட்டான். திரும்ப கேட்டபோது சொம்போடு குட்டி போட்டதாக கூறி இன்னொரு குட்டி சொம்பையும் கொடுத்தான். மறு நாள் ஒரு வாளி கேட்டான்.திரும்ப கொடுத்த போது குட்டி வாளி ஒன்றும் சேர்ந்து வந்தது. பின்பு இரவலாக குடம் கொடுத்தபோதும் குட்டி குடம் சேர்ந்து வந்தது.அடுத்த வாரத்தில் ஓரு நாள் கல்யாணத்துக்கு போக 5 பவுன் செயின் கேட்டான். நம்ம ஆளும்  2 பவுன் குட்டி செயினும் சேர்ந்து வரும் என்ற ஆசையில் செயினை கொடுத்தான்.

மறுவாரம் வரை செயின் வராததால் கொடுத்தவன் கேட்டான். அதற்கு அவன் "அடடே அப்பவே சொல்லமறந்து விட்டேன்

அந்த செயின் பிரசவத்திலேயே செத்துவிட்டது" என்று சொல்லி விட்டான்.


அப்படித்தான், கிரிப்டோகரன்சிகள்,ஓரு லட்சம் இரண்டு லட்சம் ஆகலாம். இரண்டு லட்சம்  ஐந்து லட்சம் ஆகலாம். ஐந்து லட்சம் பத்து லட்சம் கூட ஆகலாம்.

ஆனால் பத்து லட்சமும் ஒரே நாளில் போய்விடும். யாரையும் கேட்க முடியாது. அதனால்தான் சீனா,ஆஸ்திரேலியா,பங்களாதஷ், ரஷ்யா,எகிப்து,மொராக்கோ போன்ற நாடுகள் பிட்காயினை தடை செய்துவிட்டன.


பிட்காயின் மட்டுமல்ல, கிரிப்டோகரன்சிகள் அனைத்துமே பாதுகாப்பானவை அல்ல.


ஜெ மாரிமுத்து

தென்றல் இதழ் 30

1 Comments

முந்தைய பதிவு அடுத்த பதிவு