Trending

ஞானரதம் | அத்தியாயம் 1

 


இந்த உலகம் எப்படி இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறாயோ, அது போன்று முதலில் உன்னை மாற்று என்றார் மகாத்மா காந்தியடிகள்.


இந்த உலகம் ஏற்ற தாழ்வு இல்லாது பிரிவினை காணாத மனப்பக்குவத்திற்கு வர வேண்டி கவித்தலைவர் மகாகவி சுப்ரமணிய பாரதியின் இந்த கவனித்தம் இல்லாத ஞானப்படைப்பை தென்றலில் வெளியிடுவதை எண்ணி மனச்சாரம் தண்னென்றபடியாகி மகிழ்வுறுகிறோம்.


தென்றல் குழு


ஞானரதம்


பின்மாலைப் பொழுது, திருவல்லிக்கேணி, வீரராகவ முதலித் தெருவில் கடற் திசையை நோக்கியிருக்கும் ஒரு வீட்டு மேடையின் மீது இளைப்பாறும் பொருட்டு ஒரு மஞ்சத்தின் மீது படுத்துக்கொண்டிருந்தேன். ஆனந்தகரமான கடற்காற்று நான் படுத்திருந்த முன்னறையிலே நான்கு பக்கங்களிலிருந்தும், கண்ணாடிச் சாளரங்களின் மூலமாகவும், புறக்கதவு நிலைகளின் மூலமாகவும் வந்து நிரம்பிய வண்ணமாக இருந்தது. அந்தக் காற்றும் பின்மாலையொளியும் கலந்ததினால் உண்டாகிய தெளிவும், இன்பமும் என்னால் கூறிமுடியாது. "ஆகா! இப்போது போய் நீராடி விட்டு, நேர்த்தியான ஒரு குதிரை வண்டியில் ஏறிக்கொண்டு, கடற்கரையோரமாகத் தெற்கே அடையாற்றுக்குப் போய், வழியெல்லாம் காளிதாஸனுடைய சாகுந்தலத்தையேனும், அல்லது ஓர் உபநிடத்தையேனும் கொண்டு போய்ப் படித்து இன்பமடைந்துகொண்டே திரும்பினால் நல்லது" என்ற சிந்தனை உண்டாயிற்று. ஆனால், என்னிடம் குதிரைவண்டி கிடையாது என்ற விஷயம் அப்பொழுதுதான் ஞாபகத்திற்கு வந்தது. 


"அடடா! மிகுந்த செல்வம் இல்லாததனால் உலகத்தில் பலவிதமாகிய இழிவான இன்பங்கள் மட்டுமல்ல - உயர்ந்த இன்பங்கள் கூடப் பெறுவதற்குத் தடை ஏற்படுகிறதே! என்று எண்ணினேன். அப்பொழுது, என் மனம் "மூடா, சகல மனிதர்களிடத்திலும், ஈசன், ஞானம் என்பதோர் தெய்வீக ரதத்தைக் கொடுத்திருக்கின்றார். அது விரும்பிய திசைகளுக்கெல்லாம் போய் விரும்பிய காட்சிகளையெல்லாம் பார்த்து வரக்கூடிய வல்லமை உடையது; அதைப் பயன்படுத்தி இன்பமடையாமல் எந்த நிமிஷத்திலும் உன்னைக் கீழே தள்ளித் தீங்கு செய்யக் கூடியதாகி இழிவு மர வண்டியிலே ஏன் விருப்பம் கொள்கிறாய்?" என்றது. உடனே ஞானமாகிய ரதத்தைக் கொண்டு தயார் செய்து வைக்கும்படி எனது சேவகனாகிய "மனவுறுதி"யனிடம் கட்டளை யிட்டேன் ரதம் வந்து நின்றது. அதில் ஏறிக்கொண்டேன். ஆனால் எனது ஞானரதம் மற்றவர்களுடையதைப் போல் அத்தளை தீவிரம் உடையதன்று. எளிதாக நெடுந்தூரங் கொண்டு போகத் தக்கதும் அன்று. கொஞ்சம் நொண்டி. என்ன செய்யலாம்? இருப்பதை வைத்துக்கொண்டுதானே காரியங் கழிக்கவேண்டும்? ஆகவே, அந்த ரதத்தின்மீது ஏறிக்கொண்டேன். அதிலேறி நான் கண்டுவந்த காட்சிகளும் அவற்றின் அற்புதங்களும் இங்கே குறிப்பிடப்போகிறேன். 


கவலையற்ற பூமி 


எனது ஞானத்தேரை நோக்கி, "இந்த கணமே என்னை, துக்கமில்லாத பூமி எங்கேனும் உளதாயின், அங்குக்கொண்டு போ" என்று ஏவினேன். ஆகா! இந்த ரதத்தை வைத்துக் கொண்டிருந்தும், இத்தனை நாள் எனக்குக் கவலையும் மன உளைச்சலும் இல்லா திருக்க வழி தெரியாமல் போய் விட்டதே! எத்தனை நாள் எனது மனம் தூண்டிற்புழுவைப் போலத் துடித்துக்கொண்டிருக்க, அதை விடுதலை செய்வதற்கு யாதொரு தீர்வும் அறியாமல் பரிதவித்திருக்கின்றேன். அம்மம்மா! இந்த உலகத்துக் கவலை களை நினைக்கும்போதே நெஞ்சம் பகீரென்கிறது. அவற்றுக்குள்ள விஷ சக்தியை என்னென்பேன்? ஒருவனது முகத்திலுள்ள அழகையும், குளிர்ச்சியையும், இளமையையும் இந்தக் கவலைகளே அழித்துவிடுகின்றன. கண்களில் ஒளியை மாற்றிப் பசலையும். உடல் நிறம் மங்குதலும் உண்டாக்கிவிடுகின்றன. வரிகளும், கன்னங்களிலே கருங்கல்களும், இந்த நீசக் கவலைகளினாலேயே ஏற்படுகின்றன. எனது தொண்டையின் இனிய குரல் போய், கடூரமான கரகரப்புச் சத்தம் உண்டாகிறது. மார்பிலும், தோளிலும், இருந்த வலிமை நீங்கிப்போய் விடுகிறது. இரத்தம் விரைவாக ஓடுதலின்றி மாசு நீரோடை போல் மந்தம் அடைகின்றது. கால்களில் தீவிரமில்லாமல் போய்விடுகிறது. கவலைகள் என்ற விஷ உயிர்கள்  ஒருவனுடைய உடலை உள்ளூர அரித்துவிடுகின்றன. மறதியை அதிகப்படுத்தி விடுகின்றன. முக்கியமான செய்திகளெல்லாம் நல்ல வேளையிலே நினைவிற்கு வராமல் போய்விடுகின்றன. படித்த படிப்பெல்லாம் பாலைவனத்திலே பெய்த மழைபோல பலனற்று போய்விடுகின்றது. அறிவிலே பிரகாசமில்லாமல், எப்போதும் மேகம் படர்ந்தது போலாய் விடுகிறது. யோசனை தட்டுகிறது. ஐயோ இந்தக் கவலைகளாகிய சிறிய சிறிய விஷப் பூச்சிகளுக்குள்ள திறமை வைத்திய சாத்திர நிபுணர்கள் கூறும் மகா கொடூரமான கண்ணுக்குத் தெரியாத நோய்ப் பூச்சிகளுக்குக்கூடக் கிடையாது. 


"ஞானரதமே, நீ நம்மை இப்போது கவலையென்பதே இல்லாத உலகத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்" என்று கட்டளையிட்டேன். அப்போது மனம் வந்து ரதத்தைத் தடுத்துக் கொண்டது. "அது அத்தனை சுகமான உலகமன்று, கவலை இல்லாமலிருந்தால் மட்டும் போதுமா? வேறு இன்பங்கள் அனுபவிக்கக்கூடிய இடம் ஏதேனும் நமக்குத் தோன்றவில்லையா? கவலையே இல்லாத இடத்தில் சுகமும் இராது என்று எனக்குத் தோன்றுகிறது. மேலும் மேலும் என்னவோ, இன்ன காரணமென்று சொல்ல முடியாது. ஆனால் அங்குப் போவதில் எனக்குப் பிரியமில்லை" என்று மனம் கூறிற்று. 


நான் கோபத்துடன், "சீச்சி , பேதை மனமே, உனக்கு ஓயாமல் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் வேதனைகளையும், உளைச்சல் களையும் கண்டு இரங்கி, நான் உன்னைச் சிறிது நேரமேனும் அமைதியுலகத்திற்குக் கொண்டுபோய் வைத்துத் திரும்பலாம் என்று உத்தேசித்தேன். இதற்கு நீயே மறுப்பு சொல்ல வருகிறாயா?" என்று கண்டித்தேன். மனம் பிணங்குதல் மாறாமல் மறுபடியும் எதிர்த்து நின்றது. 


எனக்கு இந்த மனம் என்ற மோகினியிடத்தில் காதல் அதிகமுண்டு, ஆதியில் எவ்வாறு இந்த மோகம் உண்டாயிற்று என்பதை இங்கே விரிவாக எழுத முடியாது. அது ரகஸ்யம். ஆனால், நாளேற நாளேற நான் வேறு இந்த மனம் வேறு என்ற த்வைத சிந்தனையைப் பெரும்பாலும் மறந்துபோகும் வண்ணமாக எனக்கு இம்மோகினியிடத்தில் பிரேமை மிகுந்து போய்விட்டது. இந்த மனம் படும் பாடுகளைக்கண்டு பொறுக்காமலேதான் நான் கவலையற்ற பூமி தரிசனத்திலே விருப்பம்கொண்டேன். இப்போது மனம் அந்த யோசனையில் காரணமற்று வெறுப்புக் கொள்வதைக் கண்டு எனக்குத் திகைப்பும் இரக்கமும், கோபமும் கலந்து பிறந்தன. எவ்வளவோ விதங்களில் மனத்தைச் சமாதானம் செய்ய முயன்றேன். மனம் பின்னும் கண்மூடிக்கொண்டு ஒரேயடியாக ஓடச் சாதனை சாதிக்கத் தொடங்கிற்று. எனக்கு இன்ன செய்வதென்று தெரியவில்லை. பிறகு, ஒரே நிச்சயத்துடன், மனமே, நான் இந்த விஷயத்தில் என் பேச்சைக் கேட்கவே மாட்டேன். உன்னுடைய நன்மையைக் கருதியே நான் செய்கிறேன். ஞானரதமே உடனே புறப்படு என்றேன். 


அடுத்த நிமிஷத்தில் கவலையற்ற பூமிக்கு வந்து சேர்ந்தோம். 


நெடிதோங்கி வளர்ந்த கோட்டைச்சுவர் வாயிலிலே போய் ரதம் நின்று விட்டது. நான் தூரத்திலிருந்தே அந்தக் கோட்டையைப் பார்க்க முடிந்ததாயினும், எனது ஞானத்தேர் போனவுடன் அந்த வாயிற் கதவுகள் தாமாகவே திறந்துவிடும் என்று எண்ணினேன். அவ்வாறு திறக்கவில்லை. என்ன ஆச்சரியம்! ஞானத்தேர்கூட நுழையமுடியாதபடி அத்தனை பரிசுத்தமானதா இந்த உலகம்? என்று வியப்புற்றேன். எனது மனமோ முன்னைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாக நடுங்கத் தொடங்கிற்று. அதற்கு என்னிடம் பேசக்கூட நாவெழவில்லை. கோட்டை வாயிலுக்கு வெளியே ஒரு வாயில்காப்பான் உருவின கத்தியுடன் நின்று கொண்டிருந்தான். நெருப்பு நிறங்கொண்டதும், இமயமலையைக் கூட ஒரே வெட்டில் பொடிப்பொடியாகச் செய்துவிடுமென்று தோன்றியதுமாகிய அந்த வாளின்மீது "விவேகம்" என்று கண்ணைப் பறிக்கக்கூடிய ஜோதியெழுத்திலே எழுதப்பட்டிருந்தது. வாயில் காப்பான், “யார் அது? எங்கு வந்தாய்?" என்றான். 


நான் அவனுக்கு வந்தனம் கூறிவிட்டு, “கவலையற்ற உலகத்தைபார்த்துவிட்டுத் திரும்பலாமென்ற எண்ணத்துடன் வந்தேன்" என்று சொன்னேன். அதைக் கேட்டு அவன் கடகடவென்று குலுங்கக் குலுங்க நகைக்கலாயினான். 


"ஏனையா சிரிக்கிறீர்?" என்று கேட்டேன். அவன் மறு மொழி கூறாமல் சிரித்துக்கொண்டிருந்தான். 


ஏழை மனமோ நிமிஷத்துக்கு நிமிஷம் அதிக திகிலுறுவதாயிற்று. எனக்கு மிகவும் திகைப்புண்டாகிவிட்டது. எனவே, கோபத்துடன் வாயில்காப்பானை நோக்கி, "ஏனப்பா, உள்ளே போகலாமா, கூடாதா? ஒரே வார்த்தையில் சொல்லி விடு கலகல வென்று சிரித்துக்கொண்டிருக்கிறாயே?" என்று கேட்டேன். 


அதற்கு வாயில் காப்பான், “உனக்கும் அமைதிக்கும் வெகு தூரம்" என்று தனது வாய்க்குள்ளேயே (ஆனால் எனது செவியிலே படும்படி) முணுமுணுத்து விட்டுப் பிறகு "கோபங் கொள்ளாதே அப்பா, நீ கவலையற்ற பூமியை ஏதோ நாடக சாலை போலக் கருதிப் பார்த்துவிட்டுத் திரும்ப போவதாக கூறியது எனக்கு நகைப்பை உண்டாக்கிற்று. சாதாரணமாக, இவ்வுலகத்துக்கு வருபவர்கள் திரும்ப வெளியே போகும் வழக்கம் கிடையாது" என்று இரைந்து கூறினான். 


"அது சரி, உள்ளே நாங்கள் பிரவேசிக்கலாமா, கூடாதா? தயவு செய்து சொல்லும்". 


"நீ சாதாரணமாகப் பிரவேசிக்கலாம். இது சகல ஜீவர் களுக்கும் தாய்வீடு இங்கு வரக்கூடாது என்று எந்த ஜீவனையும் தடுக்க எனக்கு அதிகாரமில்லை. ஆனால் வைராக்கியக் கோட்டையைக் கடந்து உள்ளே செல்லும் உரிமை உன்னுடன் வந்திருக்கும் மனம் என்ற பொய்ப் பொருளுக்குக் கிடையாது. அது உள்ளே போகுமானால் அக்கினி உலகத்திற்குள் புகுந்த பஞ்சுப் பொம்மை போல நாசமடைந்துவிடும்" என்றான். (தொடரும்)


பாரதியார்

தென்றல் இதழ் 26

2 Comments

  1. உலகத் தமிழ் வாசக அன்பர்களே..! பாரதி மேல் பித்துபிடித்தோர்களே..!
    முற்றிலும் அரிய பொக்கிஷம் ஒன்றை நம்தென்றல் ஏந்தி வந்திருக்கிறது.. வாரந்தோறும் அள்ளி அருந்திட மறவாதீர்கள். உறுதியாக உங்கள் ஞான அறை விசாலமாகும். நம்பலாம். அறிவுரை கூறி சாகடிக்காது. பொய்களை கட்டி போரடிக்காது. கனவு லோகத்தில் முழுவிழிப்போடு உலவிட வைக்கும்.

    அதோடு மூலநூலில் இருந்த சில காலாவதியான வழக்காறு சொற்களுக்கு பதிலியாக நம் ஆசிரியர் அதன் பழமைசிதையாத நடையில் சொல்லமைத்து தந்து வாசிப்பை எளிதாக்கியிருக்கிறார்..

    நன்முயற்சிக்கு நல்லாதரவு நல்கிடுங்கள்.

    ReplyDelete
  2. இப்படி ஒரு ஞான புத்தகத்தை இப்போது தான் அனுபவிக்க முடிகிறது.தென்றலுக்கு நன்றி

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு