Trending

குறுந்தொகை 10 மற்றும் குறுந்தொகை 11 - பாடலும் கதையும்

குறுந்தொகை 10

மன்னிப்பே தண்டனை


kurunthogai



வயலினில் நின்றுகொண்டிருந்த சிறுவர் சிறுமியர், வானத்தில் தங்கள் இருப்பிடத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வெண் குருகுகளை எண்ணி விளையாடிய மாலை நேரம் அது..


அந்த வெண்குருகுகளில் ஒரு வெண்குருகு வருத்தத்துடன் வயலில் அமர்ந்திருப்பதை போல ஒரு பெண் வயலின் வறப்பினில் அமர்ந்திருந்தாள்.


'தமயந்தி… வா.. செல்லலாம் பொழுது சாயும் நேரம் நெருங்கிவிட்டது!'


'என்ன? இவள் நிலத்தை வெறித்து பார்த்தபடியே அமர்ந்திருக்கிறாள் நான் சொல்வதை கூட கேட்காமல்??' என்று தமயந்தியின் அருகில் அமர்ந்தாள் சிவகாமி, பின் அவள் தோளில் கை வைத்து


'என்ன இப்படி சிந்தனையிலேயே ஆழ்ந்து இருக்கிறாய்…?' என்றாள்.


'உனக்கு தெரியாதா!!'


'சரி.. அதையே சிந்திப்பதா..! அதை பற்றியே சிந்தனை செய்தால் வையிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு நேரும்'


'மறக்க கூடிய நிகழ்வில்லையே அது'


' என்ன செய்வது எல்லாம் விதி! புறப்படு விரைவில் வீட்டுக்குச் செல்வோம்' என்று தன் தோழி தமயந்தியின் கை பிடித்து அழைத்துச் சென்றாள் சிவகாமி தன் வீட்டிற்கு.


இரவு நேரம். விளக்கின் சுடர் ஒளி ஒரே நேர்க்கோட்டில் இருந்தது அதை உற்று சிந்தனை செய்த படியே அமர்ந்திருந்தாள் தமயந்தி. அவள் கண்களில் நீர் வழிந்தது. அவள் அருகில் சிவாகமி  சட்டென அமர அதனால் ஒரே நேர்க்கோட்டில் சென்ற விளக்கின் ஒளிச்சுடர் அங்கும் இங்கும் அசைய சிவகாமியின் சிந்தையும் கலைந்தது. அவசர அவசரமாக கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தாள்.


பிறகு 'நான் எத்தனை நாள் தான் உன் வீட்டிலேயே உனக்கு பாரமாக இருப்பது..!' என்றாள்.


'என்ன ஆயிற்று உனக்கு? ஏன் இவ்வாறு பேசுகிறாய்?'


'இல்லை… உன் தாயார் இறந்து இருபது நாட்கள் ஆகிறது உனக்கு நான் ஆறுதல் சொல்லி என் வீட்டில் தங்க வைக்க வேண்டும். நானோ இங்கே தங்கி இருக்கிறேன்!' என்று சொல்லிய தமயந்தி முகம் மேலும் வாடியது.


'அதை விடு! சரி.. நான் ஒன்று கேட்பேன் நீ... அதற்கு.. பதில் சொல்ல வேண்டும்!!'


'கேளடி'


'இப்போது உன் கணவன் திரும்பி வந்தாள்… அவரை ஏற்றுக்கொள்வாயா?' என்று கேட்டாள் சிவகாமி


 'அவர் வந்தால் தானே… அது இனி நடவாத காரியம்.. ' ஏக்க மொழியில் தமயந்தி பேசினாள்.


காலச் சக்கரம் சுழல ஒரு மாதம் சென்றது.


தமயந்தி வயிற்றில் குழந்தை இருப்பதை அவள் வயிற்றுப்புடைப்பு காட்டியது.


ஒரு நாள் காலை சிவகாமி வயலை பார்வையிட கிளம்பினாள். தமயந்தி ஆள்ந்து தூங்கியதால் அவளை எழுப்பவில்லை.வீட்டில் இருந்து வெளிவந்தாள்.


ஒரு ஆறடி உயரத்தில் ஆஜாகுபாகுவான ஒருவன் அவளிடம் பேச முற்பட்டான். அவன் தமயந்தியின் கணவன் என கண்டுக்கொண்டாள் சிவகாமி.


'தமயந்தி….. இங்கு இருக்கிறாளா?'


'ஆமாம்.. அதற்கென்ன?' என்றாள் கோபமாக


'நீ  எனக்கு ஒர் உதவி செய்ய வேண்டும்!'


'உதவியா? அதுவும் உனக்கா?'


'ஆமாம்!'


'நீ செய்த பாவத்துக்கு உன்னை அந்த கடவுள் இது வரை உயிருடன் வைத்திருப்பதே பெரிய விஷயம்…'


' ஆமாம்… நீ சொல்வதை ஒப்புக்கொள்கிறேன்.  நான் பரத்தையுடன் சென்று பெறும் தவறு இளைத்துவிட்டேன்!  இதன் காரணமாக என் மீது அவள் கோபமாக இருப்பாள்… அதனால் நீ சென்று அவளை சமாதானம் செய்ய வேண்டும். நான் அவளுக்கு செய்த பாவத்துக்கு அவள் எனக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன்!' என்று கண்ணீர் வடித்தான் தமயந்தியின் கணவன்.


இதை பார்த்த சிவகாமி 'நீ கூனி குறுகி வெட்கம் அடையும் படி அவள் உன்னை ஏற்றுக்கொள்ள போகிறாள். அந்த மன்னிப்பே மிகுபெறும் தண்டனை உனக்கு' என்று மனதில் நினைத்துக் கொண்டு. அவனை  அசட்டு பார்வையிட்டு தமயந்தியை அழைக்க சென்றாள்.


-குகன்


குறுந்தொகை 10


யாய் ஆகியளே விழவு முதலாட்டி;

பயறு போல் இணர பைந் தாது படீஇயர்

உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினைக்

காஞ்சி ஊரன் கொடுமை

கரந்தனள் ஆகலின், நாணிய வருமே


குறுந்தொகை 11


பிரிவின் ஏக்கம்


ராதிகா வழக்கம்போல் பணிகளை முடித்து விட்டு அலுவலகத்தில் இருந்து வெளியேறி தனது இருசக்கர வாகனத்தின்மீதேறி வீட்டை நோக்கி பிரயாணித்தாள்.


வேலை பளுவினால் அவள் அசதி அடைந்திருப்பதை அவள் முக அமைப்பே காட்டியது.


வீட்டினை வந்தடைந்தாள்.


வீட்டில் யாரும் இல்லாதது போல் வீட்டின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தது. கதவுகளும் தாழிடாமல் திறந்திருந்தது.


இவள் தனது 'மொபைலின்' ஒளி துணைக் கொண்டு உள் நுழைய ஆயத்தமானாள். கதவை மெல்லமாக திறந்தாள். கதவு எளுப்பிய ஒலி அவளது நெஞ்சை படபடக்க செய்தது. உள்ளே ஒரு சிறு மெழுகுவர்த்தி மங்கிய ஒளியுடன் எரிந்தது. அது அவளது பயத்தினை மேலும் அதிகரித்தது.


உள்ளே சென்று மின்விளக்கின் சொடுக்கியை நோக்கி சென்றாள்‌.


பின்புறம் இரு பலம் பொருந்திய கைகள் அவளது கண்களை மூடியது. அவள் பயத்தினாலும் பதட்டதினாலும் தனது கைமுட்டியினால்  பின் புறம் ஓங்கி ஒரு குத்து விட்டாள்.


'ஐயோ' என்ற படி ஒரு  ஆண் மகன் கீழே விழும் சத்தம் 


சட்டென விளக்குகள் ஒளிர்ந்தன 'ஹப்பி பர்த்டே ராதிகா' என்ற சத்தத்துடன்.


அந்த மெழுகுவர்த்தி கேக்கின் மீது இருப்பதையும் அதை சுற்றி தனது அப்பா அம்மா மற்றும் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களும் தனது சினேகிதி அனிதா நிற்பதையும் ஒரே பார்வையில் கண்டு கொண்டாள்.


நாம் யாரை தாக்கினோம் என்று பின்புறம் பார்க்க 


ராதிகாவின் அண்ணன் ராதிகா தாக்கியதால் ஏற்பட்ட வலி காரணமாக அவனது வையிற்றினில் கைவைத்த படியே 'ஹப்பி பர்த்டே ராதிகா' என்றான்.


இவளுக்கு புன்னகை பீறிட்டு எழுந்தது.


பிறகு அனைவரும் 'கேக்' வெட்டி ராதிகாவின் பிறந்தநாளை கொண்டாடினர். மற்ற அனைவரும் சென்றுவிட்டனர். 


அனிதா ராதிகாவை அழைத்தாள்.


'பிறந்தநாளை கூட மறந்துவிடும் அளவுக்கு வேலை பாக்குற' என்ற படி காதை பிடித்து திருகினாள்.


'சரி…. விடு‌…!.' 


' வா...ஏன் கூட கிளம்பு!'


'எங்க?'


'ஏன் வீட்டுக்குத்தான்!'


'இல்ல நாளைக்கு ஆபிஸ் போனும்'


'ஒரு வாரம் லீவு போட்டுட்டு வா'


'அதெல்லாம் முடியாது'


'பாத்தியா…  இத கூட செய்யமாட்டுற? நீ வரலைனா ஒன் கூட இனி பேசவே மாட்டேன்'


'சரி வரேன்! ஆனா ஒரு வாரந்தான் என்னால் லீவு கேட்க முடியும்' என்றாள் ராதிகா.


அன்று இரவே ராதிகாவை அவளது பெற்றோர் சம்மதம் பெற்று அழைத்து சென்றாள்.


அனிதாவின் வீடு வந்தது. இரவு பத்தரை மணி ஆனது ஆதலால் இருவரும் தூங்கச் சென்றனர்.


மறுநாள் காலை விடிந்தது. ராதிகா கண்விழித்தாள். அனிதா சமயலறையில் சமைத்துக் கொண்டிருக்க இவளும்  உதவி செய்ய முற்பட்டாள்.


'நீ போய் தூங்கு டி… இதெல்லாம் நான் பாத்துகுறேன்'


'இல்ல நானும்..'


'போய் தூங்கு போ…' என்று உரிமையுடன் ராதிகாவை திட்டினாள் அனிதா.


சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ராதிகா 'மாமனார் மாமியார் இல்ல,  ஹஸ்பன்டும் வேற மாநிலத்துல வேலை பாக்குறாரு. உனக்கு தொல்லையே இல்ல, ஜாலியா இருக்க  இந்த வீட்ல?' என்று கேட்டாள்.


'ம்…' என்ற மொழியுடன் அனிதா சிறுநகை புரிந்தாள்.


' உனக்கோ மாமனார் மாமியார் தொல்ல, புருஷன் தொல்ல ஏதும் இல்ல


எனக்கும் கல்யாணம் நடந்து, உன்ன மாதிரி கொடுப்பனை  அமஞ்சுதுனா ரொம்ப சந்தோஷமா இருப்பேன்! '


மீண்டும் அனிதா கூறு நகையே மறுமொழியாக தந்தாள்.


இரண்டு நாட்கள் சென்றன. அந்த இரு நாட்களும் பொறாமையுடனும் ஏக்கத்துடனும் பேசி வந்தாள் ராதிகா. அதை எல்லாம் வழக்கம் போல் அனிதா கண்டுகொள்ளவில்லை.


ஒரு நாள் நடு இரவு. ராதிகா கண்முழித்து பார்த்தால் அருகில்  படுத்திருக்கும் அனிதாவை காணவில்லை.‌ பக்கத்து அறையில் அழுகுரல் கேட்டது. அந்த அறையின் கதவருகில் நின்று பாரத்தால் 'தினம் தினம் அழுகுறேன் அவர நெனச்சி.  எப்புடியாவது அவர பாத்துடனும்! அது எந்த ஊரா இருந்தாலும் சரி. எந்த பாசை பேசுற இடமா இருந்தாலும் சரி' என்று கணவனின் சட்டையை கையில் வைத்தபடி தனக்கு தானாக அனிதா புலம்பியதை ராதிகா கண்டாள்.


அனிதாவின் காதலையும். அவள் பிரிவினாள் வாடி புலம்பியதையும் எண்ணி கவலை அடைந்தாள் ராதிகா. எப்படியாவது தன் சினேகிதிக்கு உதவ வேண்டும் என்று எண்ணிணாள். தான் அவளிடம் மனம் கோணும் படி பேசியதை எண்ணி தலைக்குனிந்தாள்.


-குகன்


குறுந்தொகை 11


கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும்

பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி,

ஈங்கு இவண் உறைதலும் உய்குவம்; ஆங்கே

எழு, இனி-வாழி, என் நெஞ்சே!-முனாது,

குல்லைக் கண்ணி வடுகர் முனையது

வல் வேற் கட்டி நல் நாட்டு உம்பர்

மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்,

வழிபடல் சூழ்ந்திசின், அவருடை நாட்டே

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு