Trending

காதலும் கற்பனையும் ஹைக்கூ

my love
Copyright free image from PIXABAY


தனிமையும் 

இனிக்கிறது

உன் கரம் 

பிடிக்கும்

கனவுகளால்...!


உன்

காந்த விழி

கடைக்கண் பார்வையில்

கண்ணடிப் பட்டு

காலடி தொடர

காகிதம் போல்

கிழிந்து போன

என் முதல் காதல்

இனி திரும்பக் கிடைக்குமா...!


வானந் தழுவிய இரவும்

மேகந் தழுவிய நிலவும்

என்னைத் தழுவியது

கவி யென்னும் கனவாக…


இளமையில்

கல்வி மட்டுமல்ல

காதலும்

கடினந்தான்...!


தொலைந்து போன

என் கனவுகளுக்கு

இரவு வெளிச்சம்

தருகிறது....


புலம்பலும்

பாட்டாகிறது

கிறுக்கலும்

கலையாகிறது

குழவி பருவத்திலே…


இரவு 

வருவதாலே

நிலவுக்கு

மரியாதை…


அமைதியான 

வேளையிலே

அவள் வருவாள்

எனை அணைக்க

கவிதையாக....


உன்னை பார்த்து

சாப்பிட்ட தோசையும்

நிலாச்சோறு தான்…


நினைவுகளை

புரட்டிப் பார்க்க

தனிமை வேண்டும்

அந்த நினைவலையை

படித்துப் பார்க்க

இனிமை வேண்டும்

தனிமை நின்றது

இனிமை சென்றது…


சொல்ல

மறந்த

செய்தியை

காகிதமிடம்

சொல்வதும்

சுகந் தான்…


விண்ணிலிருந்து

வந்தவன்

மண்ணிற்கு

முத்தமளித்தான்

மழையாக…


என் 

கண்களுடன்

கோபப்பட்டேன்

அவள்

இங்கில்லை

என்று 

கூறியதால்....


வெட்கங்கள்

உன்னை

அழகாக்கும்...

வேதனைகள்

என்னை

பலமாக்கும்…


உன்னை 

அழகி என்றேன்

அழகு நிலையில்லை

என்பதை

எனை நீங்கி

நிரூபித்துவிட்டாய்…


உலகத்தை

அழித்து

படைப்பதில்

எழுதுகோலுக்கு

எவ்வளவு

ஆனந்தம்…


கடந்த கால

நினைவுகளும்

எதிர்கால

நினைப்புகளும்

நகர்த்துகிறது

நம்

நிகழ்கால

தேவைகளை


குணமாகாத

என் காயங்களுக்கு

காற்றுபுகாத

உன் அணைப்புகளே

மருந்தாகிறது


இன்று

காதலென்பது

கனவில்

நிஜமாகவும்

நிஜத்தில்

கனவாகவும்

வந்து போகும்

கடிதம் போல


மழை நடுவே குடைப்பிடித்து

நாம் இருவர் அமர்ந்திடவே

இதுபோன்ற கனவினையே

வரவேற்கும் என் மனது…


என்

கவிதையின்

காதலனுக்கு

காகித தின

வாழ்த்துகள்


உன்

கருவிழியை

பார்த்தபடியே

கையை நீட்டி

காற்றை 

அணைத்தேன்

கற்பனையில்

உன்னை 

நினைத்தேன்


இவள் 

கண்கள் ஏதோ

காந்தம் தான்

நேரே கண்டால்

விலகியது

விலகி கண்டால்

ஒட்டியது

அருகில் வர

சொல்லி

நெருங்கியது


முடிவில்லா

நம்

உரையாடலுக்கு

உன் 

முத்தமே

முற்றுப்புள்ளி


என் 

நீல வானம்

நித்தமும் நீ

உன்

அன்பென்னும்

கொட்டகையில்

மட்டும்

நான்


உன்னை

கண்டு

வெட்கமடையும்

என்

வெட்கங்களுக்கு

வெட்கமே

இல்லை…


இரவும் பகலும்

அறியாமல்

உன்னோடு

உரையாடல் 

நிகழ்ந்தது

விளைவாய்

கவிதை 

யெனும்

குழந்தை

பிறந்தது…


மழை

அழகோ

இல்லை

இலை

அழகோ

மழலை 

எங்கும்

அழகு…


தூரத்தில்

அவளிருக்க

தூறலிலே

நானிருக்க

குடையே

என்

காதலுக்கு

தூது

செல்லும்…


ஒவ்வொரு மனிதனும்

ஒவ்வொரு புத்தகம்

பலரதில் சிறுகதை

சிலர் மட்டும்

முடிவில்லா தொடர்கதை


இதழ்

சொல்ல

நினைக்கும்

சொல்லை

யெல்லாம்

மறந்து

போகும்

காதலின்

முன்னே...


மகிழமர நிழலினிலே

அந்திவந்த வேளையிலே

தென்றலிலே நின்றிருக்க

தேவராகம் கூடிருக்க

பாமகள் இடையினில்

கோமகன் விரலிருக்க

பூமேனியவன் தீண்டிருக்க

இதழின் நேரே

புலனிரண்டும் பார்த்திருக்க

வாய்மொழிக்கு வேலையில்லை


உன்னோடு

பேசிய ரகசியத்தை

காகிதத்தை தவிர

வேறு யாரிடமும்

சொல்வதில்லை 

இது சத்தியம்


கணினிக் கடலில்

காகிதப் பிரியன்

தனிமையில் 

செல்லும்

நேரம் - அது

காதலை விடவும்

சாரம்


சேகரித்த

இசையாக

கவிதையினை

எடுத்து

வந்தேன்

உனதழகின்

மயக்கத்திலே

என்னவளை

மறந்துவிட்டு

உன்னிடத்தில்

கூறிவிட்டேன்


எனக்கான வானத்தில்

பகலுக்கும் இரவுக்கும்

வெயிலுக்கும் குளிருக்கும்

முகிலுக்கும் மழையிற்கும்

பட்டத்திற்கும் பறவைக்கும்

வாடகை இலவசம்


பெண்

இதழில்

தேன்

நுகரும்

பூவிதழை

பறித்தெடுக்க

கோவிதழ்கள்

ஏங்குதடி


செவ்விதழும்

பசுமேனியும்

சூடிய

அவள்

முள்ளென்ற

கற்பால்

அதை

மூடிக்

கொண்டாள்


உயிர் காதலி 

உனக்காக 

கவிதை எழுத

வரிகள் கேட்டேன்

மறுகணமே

முகஞ் சுளித்தாள்

என் கவிதை காதலி...


நினைக்காமலே

மறந்துவிட்டாய்

நீ நினைத்தாயோ

நானறியேன்...

விழிகளாலே

பழகிவிட்டாய்

அது பிரமையோ

நானறியேன்...

விதியாலே

விலகிவிட்டாய்

அதை மட்டும்

ஊரறியும்…


தூங்காத

இரவும்

உடன் கொஞ்சும்

இசையும்

நீங்காத

நினைவுகளை

நீட்டிக்க

செய்யும்

போதை

போலாகும்


அமைதியை

தேர்ந்தெடுத்தேன்

மெல்லின

பாடலுக்கும்

புள்ளின

தேடலுக்கும்


எத்தனை

எழுதினாலும்

இந்த

பேனாவும்

காகிதமும்

தன்

காதலைச்

சொல்ல

தயங்குவது

ஏனோ…

3 Comments

  1. கடைந்தெடுத்த ஹை கிளாஸ் ஹைக்கூ.. இவை...


    #வானந் தழுவிய இரவும்

    மேகந் தழுவிய நிலவும்

    என்னைத் தழுவியது

    கவி யென்னும் கனவாக…#




    #தொலைந்து போன

    என் கனவுகளுக்கு

    இரவு வெளிச்சம்

    தருகிறது....#


    #சொல்ல

    மறந்த

    செய்தியை

    காகிதமிடம்

    சொல்வதும்

    சுகந் தான்…#


    #எனக்கான வானத்தில்

    பகலுக்கும் இரவுக்கும்

    வெயிலுக்கும் குளிருக்கும்

    முகிலுக்கும் மழையிற்கும்

    பட்டத்திற்கும் பறவைக்கும்

    வாடகை இலவசம்#



    #பெண்

    இதழில்

    தேன்

    நுகரும்

    பூவிதழை

    பறித்தெடுக்க

    கோவிதழ்கள்

    ஏங்குதடி#

    ReplyDelete
  2. ஒரு ஆரூடம் சொல்லட்டுமா..
    இதன் அநேக வரிகள் கட்டாயம் திருடப்படும்.....! பலரால் பலநோக்கில்..!🤪

    ReplyDelete
    Replies
    1. பிறருக்காவது பயன்படட்டும்

      Delete
முந்தைய பதிவு அடுத்த பதிவு