Trending

விதியின் வேகம் - சிறுகதை

 விதியின் வேகம் - குகன்

விதியின் வேகம் சிறுகதை


'ரவி....ரவி' என்று ரவியின் அம்மா
கூப்பிட ரவியோ எப்போதும் போல தொலைக்காட்சியில் ' கிரிக்கெட்' பார்த்துக்கொண்டு இருந்தான். மறுபடியும் "ரவி... எப்பபாத்தாலும் டிவியையே பாத்துக்கிட்டு இரு, கொரோனா‌ லீவு விட்டதுலேர்ந்தே நீ படிக்கிறதே இல்ல" என்று வழக்கம் போலஅவன் அம்மா அவனைத் திட்டினாள்.

ரவி 'ஏம்மா....?' என்று சற்று சலிப்பாகவே கேட்க

'போ தம்பி போய் ரேசன் கடையில அரிசி தராங்களாம் போய் வாங்கிகிட்டு வா' என்றாள் அவன் அம்மா. இவனும் வேண்டாவெறுப்பாக எழுந்து ரேசன் கார்டையும் , அரிசி வாங்க சாக்கையும் எடுத்துக்கொண்டு ரேசன் கடைக்கு கிளம்பினான். 'வீட்ல இருந்தா ஏதாவது வேலை சொல்லிக்கிட்டே இருக்காங்க இதுக்கு பள்ளிக்கூடமே திறந்துருக்கலாம்' என்று முனவியபடியே கடையை அடைந்தான்.

நல்லவேளை ரேசன் கடையில் பத்து பேர் மட்டுமே வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.இல்லை எனில், வீட்டிற்கு திரும்பி போய் 'ரேசன் கடையில ஒரே கூட்டம்' என்று கதைக்கட்டிவிடுவான் .  இன்று வரிசை குறைவாக இருந்ததால் இவனும் வரிசையில் நின்றான்.

ரவியின் பின் ஒரு முதியவர் நின்றார். பெயரோ சுந்தரமூர்த்தி மிகவும் வசதியானவர், நிறைய நிலங்களுக்குச் சொந்தக்காரர். யாரையும் மதிக்கமாட்டார். மனிதனையும் நம்பமாட்டார் கடவுளையும் நம்பமாட்டார். சற்று அசந்தால் போதும் நம்மையே விலை பேசி‌ விற்றுவிடுவார். அவர் வருசையில் நின்ற உடனேயே 'இவனுவொக்கெல்லாம் வேற வேலையே இல்லையா அரிசி வாங்க உடனே வந்துடுறானுவோ' என்று கூறினார். 'யோ சீக்கிரம் போட்டு அனுப்புயா என ரேசன் கடை ஊழியரை மிரட்டல் தோரணையில் பேசினார். ரவிக்கு முன் நின்ற ஒருவரோ "இவருக்கு இதே வேலையா போச்சு " "இவரு மட்டும் வருசையில நிக்காம நேரா அரிசி வாங்கிட்டு போயிறுனும்னு ஆச " என்று  சத்தம் குறைவாகவே முனுமுனுத்தது ரவியின் காதில் விழுகாமல் இல்லை.

வரிசையில் நின்றவர்கள் ஒவ்வொருவராக அரிசி வாங்கி செல்ல. ரவியும் ரேசன் கார்டை கொடுத்து அரிசியை வாங்கிக்கொண்டு வெளியே வந்து கயிறு ஒன்றை எடுத்து அரிசிசாக்கை கட்டிக்கொண்டிருந்தான். இவனுக்கு பின் அரிசியை வாங்கிக்கொண்டு வந்த சுந்தரமூர்த்தி  கீழே கிடந்த இருநூறு ரூபாயை சுற்றும் பார்த்து பைய பையில் எடுத்து வைத்து வேகமாக புறப்பட்டார். இவனும் தன் ரேசன் கார்டையும் வாங்கிய அரிசியையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டான்.

 எதிரில் சாலையில் அங்குமிங்கும் எதையோ தேடியபடியே  ராக்கம்மாள் பாட்டி வந்துக் கொண்டிருந்தாள். ரவியை பார்த்ததும் " யய்யா!! ரவி நா ரேசன் கடைக்கு போய்ட்டு திரும்பி வீட்டுக்கு வந்து பாத்தன் முந்தானையில முடிச்சிருந்த எறநூறு ரூபாய் பணம் கீழே விழுந்துட்டுனு நினைக்குறேன் அங்குன எங்கயாவது பாத்தியா...??" என்று இழுவலாக ரவியிடம் கேட்டாள் ராக்கம்மாள். ரவி சிறிது யோசித்தான்."சுந்தரமூர்த்தி ஐய்யா கீழே  இருநூறு ரூபாயை எடுத்ததை கூறினான் ரவி. ராக்கமாள் " நான் போய் அவருகிட்ட கேட்டு வாறேன்" என்று சொல்லி சுந்தரமூர்த்தியின் வீட்டிற்கு புறப்பட்டார்.

 ரவி தன் வீட்டை நோக்கி நகர்ந்தான். சுந்தரமூர்த்தி வீட்டினை அடைந்த ராக்கம்மாள்  சுந்தரமூர்த்தியை பார்த்து " ஐயா என் இருநூறு ரூபாய காணும் நீங்க கீழ கிடந்தத எடுத்ததா கேள்விப்பட்டேன். மாத்தர வாங்க வச்சிருந்தது எடுத்தா கொடுத்துருங்கையா..... என்றாள். சுந்தரமூர்த்தி மிகவும் கோபமடைந்தார் ' எவன் சொன்னது நா எவ்வளவு பெரிய பணக்காரன் பிச்ச காசு இருநூறு ரூபாய நான் எடுத்தனா? போமா வேலைய பாத்துட்டு' என்றார். "யாருமா உன்ட அப்புடி சொன்னது" என கோபமாக கேட்டார் ராக்கம்மாளிடம். " ஐயா ரவி தான் சொன்னான் " என்றாள் ராக்கம்மாள். " எவனோ சொல்றானு இங்க வந்து சொல்லிக்கிட்டு இருக்காத , வெளிய போமா மொதல்ல " என்று அவர் கூற ராக்கம்மாளின் கண்கள் கலங்கியது. இனியும் இங்கு நிற்க்க கூடாது என முடிவு செய்த ராக்கம்மாள் கண்ணீருடன் வீட்டிற்கு திரும்பினாள்.

வழியில் ரவி வீடு இருந்ததால் ரவியின் வீட்டிற்கு சென்று ரவியிடமும் ரவியின் அம்மாவிடமும் நடந்ததை கூறி அழுதாள். ரவியின் அம்மா அந்த பாட்டிக்கு ஆறுதல் கூறினார். ராக்கம்மாள் சென்ற சில நேரத்தில் ரவியின் வீட்டை அடைந்த சுந்தரமூர்த்தி " ஏம்மா உன் புள்ளய ஒழுங்கா வச்சிக்க  தேவ இல்லாம என்ன அந்தம்மா பணத்த நான் எடுத்ததா சொல்லிக்கிட்டு இருக்கான் " என்று ரவியின் அம்மாவிடம் கூறினார். அது மட்டுமல்லாமல் ரவியையும் திட்டினார் . ரவி உடனே "தப்பு செஞ்சவர கடவுள் பாத்து பாரு " என்றான் . இவரோ "பாப்போம் பாப்போம்" என்று கூறி  கிளம்பினார்.

நாட்கள் நகர்ந்தன. சூரிய தேவன் தன் பயணத்திற்கு கிளம்பிய காலை நேரமது . பறவைகள் கானங்கள் பாடியது. இரவு முழுவதும் காவல் புரிந்த நாய்கள் கலைப்பில் சோம்பல் முறித்தது. ரவியும் வழக்கம் போல் தன் வீட்டிற்கு "டீ" வாங்க  தனது மிதிவண்டியில் கிளம்பினான். சாலையில் சென்று கொண்டிருந்த போது ஒரு கார் அவனருகில் வந்து நின்றது.அதன் கண்ணாடி மெல்ல இறங்கியது. கையில் கட்டுடனும் தலையில் கட்டுடனும் ஒரு முதியவர் உள்ளே தெரிந்தார்.

அவரை கண்டவுடனே அது சுந்தரமூர்த்தி தான் என கண்ட ரவி ''ஐயா என்ன ஆச்சு?" என ஒரு பரபரப்புடன் கேட்டான்.  " தம்பி என்ன மன்னிச்சிடு பா " என்றார் சுந்தரமூர்த்தி. " ஏன் ஐயா ? என்ன ஆச்சு? " என்று ரவி கேட்க " தம்பி  இரண்டு நாளைக்கு முன்னாடி நம்ம ஊர் இருட்டு ரோடு வளைவுல  நான் பைக்ல  போயிட்டு இருந்தப்ப ஒரு ராலி காரன்  வண்டிய அடிச்சு போட்டு போயிட்டான் . நான் கிழவிழுந்துட்டன் என் கையில பலத்த அடி என்னோட தலையிலும் ரத்தம் வந்துக்கிட்டு இருந்தது எந்திரிக்க கூட முடியில‌ அப்ப நீ சொன்ன அந்த வார்த்தை தாம்பா எனக்கு கேட்டிச்சு,

ஒரு அம்மா ஆட்டோல வந்து என காப்பாத்தி ஆஸ்பட்டல சேத்தாங்க . நான் மயக்கத்துல இருந்ததுனால அவுங்க யாருனு பாக்கமுல்ல அடுத்தநாள் காலையில மயக்கம் தெளிந்து பார்த்தபோதுதான் தெரிந்தது அன்று நான் கடுமையாக நடந்து கொண்டேனே அந்த ராக்கம்மாள் என்று அவரிடம் நான் காசை எடுத்ததை கூறி அந்த தொகையையும் கொடுத்து மன்னிப்பு கேட்க அவரோ அதெல்லாம் வேணா மருந்து செலவுக்கு அந்த பணத்த வச்சிக்குங்கனு சொன்னாங்க . நான் அவர் காசை கொடுத்து அவரை விட்டிற்கு என் காரில் விடும்படி என் மகனிடம் கூறினேன். அவரும் போய் வாறேன் நல்ல படியாக வீட்டுக்கு வந்து சேருங்கையா என்று கூறி கிளம்பினார். நான்  இன்று தான் ஆஸ்பத்திரியில் இருந்து வரேன் வர வழியில கோயிலுக்கு போய்டு வந்தேன் இந்தாப்பா தூண்ணூரு " என்று வீபுதியை நீட்டினார். ரவியும் அதை பெற்றுக்கொண்டான். " சரிப்பா உன்ன வீட்ல அப்பறமா வந்து பாக்குறேன்" என்று கூறி சுந்தரமூர்த்தி கிளம்பினார். காரும் நகர்ந்தது. இவனும் விதியின் வேகத்தை நினைத்து புன்னகையுடன் புறப்பட்டான்.


1 Comments

  1. சிறப்பான சிறுகதை..
    சிறுகதை என்பதை விட இது சுயசரிதை என்று எண்ணுகிறேன்.

    ReplyDelete
முந்தைய பதிவு அடுத்த பதிவு